பக்கம்:கொய்த மலர்கள், மூன்றாம்பதிப்பு.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

கொய்த மலர்கள்

மிழந்து நிலை தவறலாகாது என நான் முறையிட்டுக் கொள்ளுகிறேன்.

இந்த இடையீடுகளோடு வெளி நாடுகளில் நம் வாணிபத்தை நன்கு நடத்த முடியாத போட்டிகளும் பிறவும் குறுக்கிடுகின்றன. இன்று ஜப்பான், சீனா போன்ற வெளிநாடுகள் கைத்தறி ஆடைகளைத் தயார் செய்து உலக அரங்கில் போட்டி இடத் தொடங்கிவிட்டன. உள்நாட்டில் தான் 'மில்ல'ரோடு போராட வேண்டிய நிலையென்றால், வெளி நாட்டிலும் இப்படியா என எண்ண வேண்டியுள்ளது. மற்றும் வெளிநாடுகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் நாள்தோறும் அதிகமாகிக் கொண்டே வருகின்றன. இந்திய நாட்டின் ஏற்றுமதியை வளர்த்து, இறக்குமதியைக் குறைக்க இந்த அரசாங்கம் செய்யும் திட்டங்களை நாமறிவோம். இது போன்றே உலகில் பிற நாடுகளும் தத்தம் இறக்குமதிக் கொள்கைகளை வரையறுக்கின்றன. அதனால் இக்கைத்தறி வாணிபம் வெளி நாட்டில் சிறக்க வளரவில்லை. மேலும் நான் மேலே கூறியபடி பிறநாட்டு நாகரிக வாழ்வுக்கு ஏற்ற ஆடைகள் இல்லாமையும் ஒரு குறையாகக் கருதப்படுகிறது. மற்றும் அண்மையில் விசைத்தறிகள் தோன்றிக் கைத்தறிக்குப் போட்டியாக அமைந்துள்ளமையும் அறிந்ததே. அனைத்தினுக்கும் மேலாக வியாபார முறையில் ஒழுக்கமில்லாமையை இங்கே நான் குறிக்க விரும்புகிறேன். ஒரு நாட்டுக்கு மாதிரிக்கு ஒரு ரகத்தை அனுப்பி, பின் தேவையை அனுப்பும்போது மாற்றினால் யார் தாம் அந்த வியாபாரத்தைத் தொடர்ந்து மேற்கொள்வர்? இந்த வகையில் நம் நாட்டுக்கு அண்மையில் பலதுறைகளில் கெட்ட பெயர் உண்டாகியிருப்பதை நாடு அறியும். இத்தனைக்கும் இடையிலே கைத்தறித் தொழில் எப்படியோ நசியாது வளர்ந்து கொண்டே தான் வருகிறது என்பர் கணக்கெடுக்கும் அரசாங்க அலுவலாளர்கள்,