பக்கம்:கொல்லிமலைக் குள்ளன்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


20

ள்ளிநாயகியும் போலீஸ் இன்ஸ்பெக்டரும் சில போலீஸ் வீரர்களை அழைத்துக்கொண்டு இரவு நேரத்திலே காரில் புறப்பட்டார்களல்லவா? அவர்களைப்பற்றி இதுவரையில் நாம் கவனிக்காமல் இருந்துவிட்டோம். இப்பொழுது அவர்களைப்பற்றிக் கவனிப்போம். கூடல் பட்டணத்திற்குச் சென்று, தங்கமணி முதலியவர்களைச் சந்திக்க வேண்டும் என்பது வள்ளிநாயகியின் நோக்கம். பரிசலில் தப்பிச் சென்ற தங்கமணி முதலியவர்களுக்கு உதவி செய்ய அனுப்பிய போலீஸ் வீரர்கள் மற்றொரு பரிசலிலே வேகமாகச் சென்று, அவர்கள் செல்லும் பரிசலைக் கண்டுபிடித்து, உடனழைத்து வருவார்கள் என்று அவள் நம்பினாள்.

வஞ்சியூரிலிருந்து கூடல் பட்டணத்திற்குச் செல்ல இரண்டு வழிகள் உண்டு. ஒன்று, சல்லிக்கல் போட்டுப் பாவிய நல்ல சாலை. ஆனால் அது வெகுதூரம் சுற்றி வளைத்துக்கொண்டு போகிறது. அதில் சென்றால் 180 மைல் ஆகும். மற்றொரு வழி, மலைக்கு அருகிலே செல்லுகின்றது. அதில் சென்றால் 80 மைல் தொலைவுதான். ஆனால், அது காட்டுப்பாதை. அது நன்றாகச் செப்பனிடப்பட்டதல்ல. இருந்தாலும், அதன் வழியாகச் சென்றால், வேகத்தைக் குறைத்துச் சென்ற போதிலும் கூடல் பட்டணத்தை விரைவாக அடைந்துவிடலாம். இதை எண்ணியே காட்டுப்பாதையில் செல்வதாக முடிவு செய்து கொண்டார்கள். அப்படி முடிவு செய்தது தொல்லையாக முடியுமென்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை.

அவர்கள் சுமார் பாதி தூரம் சென்றிருப்பார்கள். அது வரையிலும் எவ்விதமான தொந்தரவும் ஏற்படவில்லை. வள்ளி நாயகி முதலில் கொஞ்ச தூரத்திற்குக் கார் ஓட்டினாள். பிறகு போலீஸ் இன்ஸ்பெக்டரும் போலீசாரில் ஒருவரும் மாறி மாறி ஓட்டி வந்தார்கள். சுமார் முப்பது மைல் சென்றவுடனேயே லேசாகத் தூறல் விழலாயிற்று. என்றாலும் அவர்களுடைய பயணம் தடைப்படவில்லை. பாதி தூரத்திற்கு வந்தபொழுது தான் அவர்கள் எதிர்பாராத தடங்கல் ஏற்பட்டது. அப்பொழுதும்