பக்கம்:கொல்லிமலைக் குள்ளன்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

"நல்லவேளை கண்ணகி தூங்குகிறாள். இல்லாவிட்டால் அவள் ரொம்பவும் பயப்படுவாள். மரம் அப்படி ஆட்டம் கொடுக்கிறது" என்று அவன் மேலும் கூறினான். தங்கமணி சட்டென்று கயிற்றின் நுனிகளைத் தன் கையில் வாங்கிக கொண்டு கவனித்தான். சுந்தரம் சொல்வது சரிதான் என்று அவனுக்குப் பட்டது. கயிறு கையில் இருக்கும்போதுதான் மரத்தின் நிலைமையை நன்றாக உணர முடிந்தது.

"அதோ, நிலாக் கிளம்புகிறது. இப்பொழுது மணி மூன்றிருக்கலாம்" என்றான் தங்கமணி.

"இந்த வெளிச்சம் நமக்கு உதவியாக இருக்கும்" என்று சுந்தரம் சற்று உற்சாகத்தோடு பேசினான்.

"அது மெய்தான். ஆனால், இந்த மரம் இன்னும் ஒருமணி நேரங்கூடத் தாங்காது போல இருக்கிறது" என்று தன் கவலையைத் தெரிவித்தான் தங்கமணி.

இப்படியாக இருவரும் விட்டுவிட்டு உரையாடிக்கொண்டே கயிற்றை மாறிமாறிப் பிடித்துக்கொண்டிருந்தார்கள். காடுகளுக்கும் மலைகளுக்குமிடையிலே இப்படி இரவு நேரத்தில் ஆற்றில் மிதந்துகொண்டிருப்பது அவர்களுக்குத் துணிகர உணர்ச்சியையும் அச்சத்தையும் கலந்து தந்துகொண்டிருந்தது ஆனால், அவர்கள் மனம் சோரவில்லை. அச்சத்தினால் செயலற்றுப் போய்விடவில்லை. தங்களால் இயன்றதை செய்வதில் சிறிதும் தளர்ச்சியடையாமல் இருந்தனர்.

மேலும் ஒரு மணி நேரம் இந்த நிலையில் கழிந்தது “மணி. இந்தக் கயிற்றைப் பிடித்துப்பார். எனக்கென்னவோ சந்தேகமாக இருக்கிறது" என்று பரபரப்புடன் கூவினான் சுந்தரம். தங்கமணி வேகமாகக் கயிற்றைப் பற்றியதும் சுந்தரம் சொல்வது சரிதான் என்று அவனுக்குப் புலப்பட்டு விட்டது.

“இனியும் நாம் இந்த மரத்தை நம்பக்கூடாது. பிறகு நமக்கு உதவி செய்த மரமே நம்மை மோதித் தீங்கு செய்தி விடும்" என்று தங்கமணி கூறிக்கொண்டே, தன் கைப்பிடியிலிருந்த கயிற்றின் நுனி ஒன்றைத் தளர்த்தி விட்டுவிட்டு, மற்ற நுனியைப் பிடித்து இழுக்கலானான். கயிற்றை விடாமல் உருவி எடுத்துக்கொள்ள வேண்டுமென்பது அவனுடைய எண்ணம்.