114
அன்ன நடை நடந்து, மணப்பந்தல் போகுமுன்னம், மணவாளன் காணுமுன்னம், கண்ணாடி முன் நின்று, கோலம் திருத்த எண்ணிச் சென்றிடும் வேளையிலே, கண்ணாடி அதன் மீது, கல்வீசி ஒரு சிறுவன், உடைத்திட்ட பான்மைபோல, மாற்றாரின் திட்டம், மனையில் கலாம் விளைத்து மகிழ்ச்சிதனைக் குலைத்து, உறவு முறித்து, ஓர் ஊனம் ஏற்படச் செய்துவிட்டது. சென்ற திங்கள் ஒன்பதாம் நாள்—அந்நாள் துந்துபி முழக்கினர் மாற்றார். துடியாய்த் துடித்தனர், இல்லம் கண்டோர்—இன்பத் திராவிடம் காணப் பாசறை அமைத்தோர்—திராவிட முன்னேற்றக் கழகத்தினர்—நீயும் நானும்—நமது பிறப்பாளர்களாகிவிட்ட இலட்சக்கணக்கான திராவிடரும்.
ஆனால், தம்பி! மாற்றார் திட்டமிட்ட அளவுக்கோ விரும்பிய வகையிலேயோ, நமது கழகத்துக்கு ஊறு நேரிட்டு விடவில்லை, என்பது இந்த ஒரு திங்களிலேயே தெள்ளத்தெளியத் தெரிந்துவிட்டது. ஏற்பட்ட ஊனம், நமக்கு அதிர்ச்சிதரத் தக்கதாகத் தெரிவதற்குக் காரணம் அதன் அளவு அல்ல; நமது குடும்பம் அத்துணை பாசத்தால் கட்டுண்டு இருப்பதால், இதிலே சிறு பேதம், கீறல், வெடிப்பு, பிளவு, ஏற்பட்டாலும் நம்மால் தாங்கிக்கொள்ள முடிவதில்லை. நாம் படும் வேதனையைக் காணும் அரசியல் வட்டாரத்தினர் பலரும் வியப்படைகின்றனர். இதென்ன இப்படிக் கலங்குகிறார்களே! ஒரு கட்சி என்றால், சிலர் விலகுவதும். வேறு சிலர் புகுவதும், சாதாரண நிகழ்ச்சிதானே!! இதற்கும் பிறகு இருக்கத்தக்கதுதானே, கட்சி என்ற பெயருக்கே பொருத்தமுள்ளதாகக் கருதப்படும்—என்று கூறுகின்றனர்—கேட்கின்றனர், எனக்கே கூட, அவர்கள் அப்படிக் கேட்கும்போது வெட்கமாகக்கூட இருக்கிறது. இருப்பினும் என் இதயம்தான், நீ அறிவாயே தம்பி! எவர் நம்மை விட்டுப் பிரியினும், என்னால் சகித்துக் கொள்ள