115
முடிவதில்லை. இது தெரிந்துதான், அண்ணா, சிலர், உன்னை மிரட்டுகிறார்கள், என்றுகூடத் தம்பியரில் சிலர் கூறுகின்றனர்.
தம்பி! சின்னாட்களுக்கு முன்பு நடைபெற்ற கூட்ட மொன்றில், ஆர்வம் கொந்தளிக்கும் நிலையில் பேசிய தம்பி ஒருவர், சொன்னார். "அண்ணா! ஆயாசப்படாதீர்கள்! சிலர் உம்மைவிட்டுப் பிரிந்தனர்; நானும்தான் வருந்துகிறேன்; ஆனாலும் என்ன? நாங்கள் இருக்கிறோம் அணி அணியாக! உம்மை அண்ணனாக ஏற்றுக்கொண்டவர்கள்; அன்புக்குக் கட்டுப்பட்டவர்கள்; கழகத்தின் ஆணைப்படி நடப்பவர்கள். தம்பிமார்கள் இலட்சக்கணக்கில் இருக்கிறார்கள், அண்ணா! கவலைப்படாதீர்கள்!" என்று பேசினார். இனிய இசையாக இருந்தது அந்தப் பேச்சு—ஆனால் ஒரு கணம் தான்—மீண்டும் அந்தப் பழைய நினைப்பு—பழைய கவலை! நான் பேசும்போது சொன்னேன்; "எட்டுக் குழைந்தைகளைப் பெற்றெடுத்த தாய், திருவிழாக் காணச் சென்றபோது, ஒரு குழந்தை காணாமற் போய்விட்டால், பரவாயில்லை, எட்டில் ஒன்று போனால் என்ன, ஏழு இருக்கிறதே, என்றெண்ணியா திருப்தி அடைகிறாள். இல்லையே! ஏழு பிள்ளைகளையும், திக்காலொருவராக அனுப்பி, காணாமற்போன பிள்ளையைத் தேடிக் கண்டுபிடிக்கும்படி அல்லவா அனுப்புவாள்! அது போல, என்னுடன் எண்ணற்றவர்கள் உள்ளனர்—ஆயினும் அதனால், பிரிந்தவர்கள் பற்றிக் கவலை கொள்ளாமல் இருக்க முடிகிறதா! எட்டுப் பிள்ளைகளைப் பெற்ற தாய், காணாமற்போன பிள்ளையைக் கண்டு பிடித்துக் கொண்டு வரும்படி, மற்ற ஏழு பிள்ளைகளைக் கேட்டுக்கொண்டது போலத்தான், என்னுடன் இருக்கும் தம்பிமார்களை நான் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன், விலகிய, வழி தவறிய, அந்தத் தம்பிகளையும் தேடிக் கண்டுபிடித்துத் திருத்தித் திரும்ப அழைத்துக்கொண்டு வாருங்கள்!"