116
தம்பி! நான் சொன்னது சுவைக்காக அல்ல—என் மனம் அப்படி.
விலகியவர்களிடம், பாசம் குறையாமல் இருப்பதற்கு, வேறோர் காரணமும் இருக்கிறது—அவசியம் கூடத்தான் இருக்கிறது.
நாம் ஈடுபட்டிருப்பது, தாயக விடுதலைக்கான அரும் பணியில், இதற்கான ஆற்றல் அளித்திடவல்ல எவரையும் நான் இழந்துவிட விரும்பலமா? வாட்போர் புரியும் வீரன், குத்தீட்டியையும் கூடத்தானே வைத்திருக்கிறான். அஃதே போலத்தான், நாட்டு விடுதலை எனும் நற்பணிக்காக, அனைவரும், தேவைப்படுகிறார்கள். இதிலே இழப்பின் அளவும், தரமும் அல்ல, இழப்பு என்பதே இதயத்துக்கு அதிர்ச்சி தரத்தக்கதுதான். கிடைக்கும் வாய்ப்பினை எல்லாம் ஒன்று திரட்டி, களம்செல்ல வேண்டிய வேளையில் களத்தில் பயிற்சி பெற்றவர்கள், அதைவிட்டு விலகுவது என்றால், மனதுக்குச் சங்கடமாகத்தானே இருக்கும்?
தலைவிரி கோலமாக ஓடி வருகிறாள் ஓர் மூதாட்டி—வாழ்ந்தவள் இன்று வதைபடுகிறாள் என்பது பார்க்கும்போதே புரிகிறது. இரத்தம் சொட்டும் வாயுடன் ஓநாய் அவளைத் துரத்திக்கொண்டு வருகிறது. அலறுகிறாள் அம்மூதாட்டி. அந்தக் கதறல் கேட்டு, வேறோர் புறமிருந்து ஓடோடி வருகிறான் ஓர் வீரன்—கையில் வேல் கொண்டு! அவனை நோக்கி ஓடுகிறாள் அந்த அபலை, தன்னைத் துரத்தும் ஓநாயைத் திரும்பிப் பார்க்கிறாள்-திகில் கொள்கிறாள்—ஆனால் எதிர்ப்புறம் பார்க்கிறாள், வேல் உடையோன் வருகிறான்—அப்பா! காப்பாற்று? என்று கூறியபடி, கீழே வீழ்கிறாள். ஓநாயைக் கொன்று மூதாட்டியைக் காப்பாற்ற வேலாயுதத்தைப் பயன்படுத்த வேண்டியவன், வழியில் உள்ள காட்டாற்றினிலே துள்ளிடும் வாளைமீது