24
"டில்லிக்கு நாம் செலுத்தும் வரிகள் அனந்தம். ஆனால் அவைகளில் ரூபாய்க்கு எத்தனை தம்படி நமக்குச் செலவழிக்கப்படுகிறது என்று பார்க்கும்போது, பெரியதொரு ஏமாற்றம்தான் கண்ணுக்குத் தெரிகிறது, கடந்த ஆறு ஆண்டுகளில் டில்லி சர்க்காரின் கஜானாவின் ஆதரவோடு ஆரம்பித்து நடைபெற்று வரும் பெரும் அணைக்கட்டுகள், தாமோதர் பள்ளத்தாக்குக் திட்டம், ஹிராகுட் அணைக்கட்டுத் திட்டம், கோசி நீர்த்தேக்கத் திட்டம் போன்ற பெரும் பெரும் திட்டங்கள், சிந்திரி உர உற்பத்தித் தொழிற்சாலை, பென்சிலீன், டி. டி. டி. மருந்து ஆகிய மருந்து தயாரிக்கும் தொழிற்சாலைகள், இன்னும் எண்ணற்ற தொழில் திட்டங்கள் ஆகியவைகள் அனைத்தும் வடநாட்டில் நடைபெற்று வருகின்றன. இங்கு சிறு சிறு நீர்த் தேக்கத் திட்டங்களுக்குக்கூட டில்லியின் பண உதவியில்லை.
"நாம் வருஷா வருஷம் டில்லிக்கு இறக்குமதி ஏற்றுமதிகள், வருமான வரி, புகையிலை வரி, தபால் கட்டணங்கள், இரயில்வே கட்டணங்கள். ஆகியவை மூலம் கோடிக்கணக்கான ரூபாய்களைக் கொட்டியழுகிறோம். நமது நாட்டில் 100-க்கு 80 பேர் படிப்பில்லாதவராய் இருத்தலாலும், படித்தவரில் பெரும்பகுதி சுயநலமிகளாய் நாட்டைப் பற்றிய கவலையற்றிருத்தலாலும், இவைகள் விளைவிக்கும் பெருகஷ்டத்தைப்பற்றியும் நம் மக்கள் முழுதும் அறிந்து கொள்ள வாய்ப்பில்லாமல் இருக்கிறது. டில்லி சர்க்காரின் வருமானமாகிய கமார் 400 கோடி ரூபாயில் ஏறத்தாழ 200கோடி ரூபாய் ஏற்றுமதி இறக்குமதி வரிகளின் மூலம் கிடைக்கிறது. அதில் நமது பங்கு மிக அதிகம். இங்கிருந்து கொச்சி, நாகை, சென்னை, விசாகப்பட்டினம். ஆகிய துறைமுகங்கள் மூலம் ஏற்றுமதி செய்யப்படும் மிளகு, ரப்பர், மணிலாக்கொட்டை ஆகிய ஏற்றுமதிப் பொருள்களுக்குக் கோடிக்கணக்கில் டில்லி சர்க்காருக்கு வரி செலுத்துகிறோம்.