25
அதைவிட அதிகமாக இங்கு இறக்குமதி ஆகும் பொருள்களுக்கு வரி தருகிறோம். இங்கிலாந்தில் செய்யப்படும் ஒரு பெட்ரோமாக்ஸ் விளக்கு 15 ரூபாய்க்கு அங்கு விலையாகிறது என்றால், சென்னைத் துறைமுகத்தில் அது இறங்கியதும் அதற்கு இறக்குமதி வரி 10 ரூபாய் டில்லி அதிகாரிகளால் வசூலிக்கப்படுகிறது. உடனே சென்னையில் உள்ள மொத்த வியாபாரிக்கு அதன் அடக்கம் 25 ரூபாய் ஆகிறது. அவன் சில்லறை வியாபாரிக்கு 30 ரூபாய்க்கு விற்கிறான். அவன் 35 ரூபாய்க்கு யாரோ ஒரு முத்தனுக்கு விற்கிறான். அவனுக்குத் தெரியாது, தான் விளக்கிற்கெனத் தந்த 35 ரூபாயில் 10 ரூபாய் டில்லிக்கு வரியாகச் செலுத்தப்பட்டுள்ளது என்பது. இவ்வாறே நாம் வாங்கும் வெளிநாட்டுச் சாமான்களான மோட்டார், சைகிள், கடியாரம், பேனா, வாசனைத் தைலங்கள், பொம்மைகள், எஞ்சின்கள். இயந்திரங்கள் அனைத்திற்கும் கோடிக்கணக்கில் வரி தருகிறோம்—வரி தருகிறோம் என்ற நினைவே இல்லாமல், புகையிலை வரியின் மூலம் மட்டும் 10 கோடி ரூபாய் சென்ற ஆண்டில் நாம் கொடுத்திருக்கிறோம். வேறு எந்த ராஜ்யமும் தராத அளவு கொடுத்திருக்கிறோம். இவ்வளவு வரிகளை வாரிக்குவித்துக்கொள்ளும் டில்லி நமக்கெனத் தந்தது என்ன? தொல்லை தவிர வேறில்லை, எல்லோருக்கும் பொது என்பதாக ஒரு இராணுவத்தைக் கட்டி வைக்துத் தீனி போடுவதைத் தவிர, வேறு எந்தக் குறிப்பிட்ட காரியத்திலும் நமக்குப் பங்கு இல்லை. இராணுவமும் வடநாட்டில் உள்ள அநாகரிகமான இந்து—முஸ்லீம் பிரச்சனையைத் தீர்க்க அடிக்கடி பயன்படுகிறதே தவிர, நமக்குச் செய்ததென்ன? இராணுவம் துணைக்கு வரவேண்டிய எத்தனையோ வாய்ப்புகளில் நாம் ஏமாந்து விட்டிருக்கிறோம். மழையின்மையால் கிணறுகள் நம் நாட்டில் வறண்டு போயுள்ளன. இராணுவத்தினரும், அவர்கள் வசமுள்ள பெரிய இயந்திரங்களும் கிணறு-