32
என்றல்லவா, சந்தேகப்படுவர்களை, ஆயாசப்படுபவர்களை எச்சரித்தார்.
"தமிழகத்தில் சிலர் குறைகூறுகிறார்கள் — ஏன் கேரளத்தையும் ஆந்திரத்தையும் கருநாடகத்தையும் சேர்த்துக் கொண்டு போகவேண்டும் என்று அவர்கள் அவசரக்காரர்களும் ஆற்றலற்றவருமாவர். ஆத்திரப்பட்டு இப்படிப் பேசுகிறார்கள். நம்மிடம் ஆற்றலும் இருக்கிறது; நீண்ட ஆயுளும் இருக்கிறது. நல்ல நம்பிக்கையுடன் நாம் நடைபோட்டால் அந்த உண்மைப் பாதையில் வெற்றிபெற முடியும் அவசரப்படுவோமானால் நடைபெறவேண்டிய நல்ல காரியத்தைக் குலைத்த பழி வருமே தவிர, நாட்டுக்கு நல்லதாகாது."
1959-ல் இந்த ஆர்வம் இருந்தது, இப்போது அவநம்பிக்கை வரக்காரணம்?
1959-க்குப் பிறகு, பல நாடுகள், விடுதலை பெற்றதைப் படித்தோம்.
தனி அரசு நடத்தக்கூடிய வசதியற்றவைகள் என்று பொருளாதார நிபுணர்கள் கூறத்தக்க நிலையில் உள்ள நாடுகள் கூட விடுதலை பெற்று—பிறநாடுகளை விடுவிக்கும் வீரப்பணியில் ஈடுபட்டிருக்கக் காண்கிறோம். இப்போது ஏன் அவநம்பிக்கை? கொடுத்ததைக் கொடுங்கள் என்று நாம், கீழே இறங்கிக் கை ஏந்தவேண்டிய அவசியம் என்ன வந்தது? என்னவோ, வட நாட்டு ஏகாதிபத்தியம் நம்மைச் சந்தித்து, "நீ கேட்பது மிக அதிகம் அப்பா! அவ்வளவு தரமுடியாது! கொஞ்சம் பெரிய மனது செய்து, நீ கேட்பதன் அளவைக் குறைத்துக்கொள். குறைத்துக்கொண்டால், தருகிறேன்" என்று சமாதான உடன்படிக்கைக்கு வந்து நிற்பதுபோலவும், இந்தச் சமயத்தில், நாம் சிறிது விட்டுக் கொடுத்து, சமரசமாகிக், கொடுத்ததைப் பெற்றுக்கொண்டு