உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கொள்கையில் குழப்பமேன்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

47

இது எனக்குப் புரிவதால்தான், எனக்குக் கோபமோ, குமுறலோ, எளிதில் ஏற்படுவதில்லை.

இந்த நிலை அனைவருக்கும் ஏற்பட்டாகவேண்டும்.

அப்போதுதான் அரசியல் என்பது அமளிகளற்ற, கருத்தரங்கம் என்ற தூய நிலை பிறக்கும்.

அந்தக் கருத்தரங்கம், ஒளிதரவேண்டும்—வீணான வெப்பத்தை அல்ல.

வேறுபாடான எண்ணங்கள் எழலாம், மோதிக் கொள்ளலாம், இறுதியில் குழைந்துபோகலாம், வெறுப்புணர்ச்சியாக மாறிடலாகாது.

இது நாடு; காடு அல்ல ! மக்களை நல்வழிப்படுத்த முடியும் என்று நாம் இயக்கம் நடத்த முற்படுகிறோம்—நாம் முதலில் நல்வழி நடக்கவேண்டும்.

எத்தனை கோபதாபம் ஏற்பட்டாலும்—ஏற்படக்காரணம் ஏற்படினும்—அடக்கம், பொறுப்புணர்ச்சி மறத்தலாகாது, என்பதனையும் இந்த நேரத்தில் அனைவருக்கும் கூற விரும்புகிறேன்—மறந்துவிட்டேன்—பிரிந்துபோனவர்கள், நீ யாரடா எமக்குப் புத்திமதி கூற என்று கோபித்துக் கொள்ளவேண்டாம். முன் தொடர்புகளை அவ்வளவு எளிதாகவும், விரைவாகவும், மறந்துவிட இயலாததால், பழக்கம் காரணமாக, அனைவருக்கும் கூறுகிறேன் என்று சொல்லிவீட்டேன். குறை பொறுத்திடுக! என்னை, இப்போதும், 'அண்ணன்' எனக் கொள்வது, அரசியல் ரீதியாகப் பார்த்தால்கூடத் தவறுமல்ல, தரக்குறைவுமல்ல என்ற எண்ணம் கொண்டவர்களுக்குக் கூறுகிறேன்;

கொள்கை மறவாதீர் !
கோபத்துக்கு ஆளாகாதீர் !
கூடி வாழ்வது பொறுப்பான காரியம்—அறிவீர்.
குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை !