56
"ஆந்திரா சட்ட மன்ற உறுப்பினர் வாவில்ல கோபால் (ரெட்டி) என்பவர், 'அந்தந்த மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் வேண்டும்' என்றும், 'தனித் தனியே இராணுவம் வேண்டு' மென்றும் பேசியிருக்கின்றார்; இப்படிக் காங்கிரசிலிருந்து நம்மை நோக்கி வருகிறார்களே தவிர, யாரும் இங்கிருந்து அங்கே செல்லவில்லை !"
நம்மை நோக்கி வருகிறார்கள்—என்று 1960-ல் சொல்ல முடிகிறது—அந்தத் தித்திப்புப் பேச்சுப் பெற்றுத் திராவிட மக்கள் மகிழ்ந்திருக்கும் வேளையில், எதெதற்கோ சச்சரவு என்று கூறிக் கொண்டிருந்தவர்கள், திடீரென்று, உங்களுக்கும் திராவிடநாடு என்னும் இலட்சியமே வெறும் கனவு—அடைய முடியாதது—என்று தோன்றுகிறது என்று கூறிவிட்டு, இத்தனை காலமும் பேசிக் கொண்டிருந்ததற்கு முற்றிலும் மாறாகப் புதிய கொள்கைகளைக் காட்டுகின்றனர்.
கொள்கைகள், மக்களின் இதயத்தில் இடம் பெற்றுவிட்டன ; இவர்களோ, தாம் இதுவரை பேசி வந்தது உதட்டளவே என்று துளியும் கூச்சமின்றி, மக்கள் என்ன எண்ணுவார்கள் என்பது பற்றிக் கவலையற்று, வேறு பேசுகிறார்கள்.
பிரிவினை வேண்டாம், திராவிடக் கூட்டாட்சி வேண்டாம், சமதர்மத் திட்டம் வேண்டாம் என்றல்லவா கூறுகின்றனர்.
டாடாவும், பிர்லாவும் கூடச் சமதர்மம் கூடாது, தேவையில்லை என்று பேசக் காணோம்—பேச வெட்கப்படுகிறார்கள்—புதுக் கட்சியினர் திட்டவட்டமாகக் கூறுகிறார்கள். சமதர்மம் போன்ற இலட்சியத்துக்கு நாங்கள் கட்டுப்படப்போவதில்லை—தொழில் வளர்ந்தால் போதும்—எந்த முறையிலேனும் என்று.