57
வடநாட்டு முதலாளிகளே கூடித் திராவிடம் புகுந்து தொழில் நடத்தலாமாம் ! தடை கிடையாதாம் ! வரவேற்பு உண்டு போலும்!!
திராவிட முன்னேற்றக் கழகத்தின் இப்போதைய தலைமை, மந்தமாக இருக்கிறது ; தீவிரம் இல்லை ; என்று குறைபட்டுக் கொண்டு இருந்த இளைஞர்கள், எப்படி இந்தப் பிற்போக்குத் திட்டத்தை இனிக்கிறது என்று கொள்வர். சமதர்மமே கூட அல்லவா, கசப்பாகி விட்டது. தம்பி ! என்னை விட்டு விலகினர்—வேதனையைத் தாங்கிக் கொள்கிறேன்—இலட்சியத்தையுமா விட்டு விலகிச் செல்ல வேண்டும் ? பாசமும் நேசமும் வேண்டாம், அவை வெறும் பசப்பு என்றனர்—சரி, காலம் கருத்தூட்டும் என்று காத்துக் கொண்டிருக்க முடியும். தனி அரசு கூடவா, வேம்பாகிவிடுவது? என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லையே—சிலரிடம் சீற்றமும், பொதுவாகவே ஒரு சலிப்புணர்ச்சியும் தோன்றினால், இப்படியா ஒரே அடியாக அடிப்படையையே அழித்து விடுவது? நம்பிக்கை நாசமாகி விட்டதா ? எப்படி ? 1959-ல் கூட அல்லவா, நம்பிக்கைச் சங்கு ஊதினார்கள்.
"ஆதிக்கத்திலிருந்து பழகிப்போன நமக்கு விடுதலை கிடைக்கும், எதிர்காலம் அதிவிரைவிலே கிட்டும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதை விரைவில் சாதித்துக் கொள்ள தி. மு. கழகம் நல்ல புடம் போட்டெடுத்த அரிய வீரர்களை வைத்துக் கொண்டிருக்கிறது. அதைச் சாதிக்க நமக்கிருக்கிற சாதனம், கூர் ஏறி ஒளி பெற்று வருகிறது. மெல்ல மெல்ல உறுதியாக வளர்ந்து வருகிறது, என்றைக்காவது ஒரு நாள் அந்த ஆவலைப் பூர்த்தி செய்து கொள்ளத்தான் போகிறோம் என்ற நம்பிக்கை நமக்கிருக்கிறது."
இப்படிப் புதுவையில் பேசியதைக் கேட்டவர்கள் பூரித்துப் போயினர் என்பது மட்டுமல்ல, இந்த எழுச்சியும்