62
வாகிறது; வடநாட்டு முதலாளிகள் மட்டுமல்ல, அந்நிய முதலாளிகளின் பிடியும் வலுவாகி வருகிறது. அந்த நிலையிலே எந்த மாறுதலும் இல்லை.
நிர்வாக ஊழலோ நாளும் வளருகிறது ; ஒரு அரசின் அழிவுக்கான மூல காரணம் என்றல்லவா அது கூறப்படுகிறது. அந்த நிலையிலேயும் மாறுதல் இல்லை.
கதருடை தரித்த சர்வாதிகாரியாகத்தான் நேரு, இந்தியத் துணைக் கண்டத்தை ஆண்டு கொண்டிருக்கிறார். அதிலேயும் ஒரு மாறுதலும் இல்லை.
இந்த நிலையை தி. மு. க. எதிர்த்து வருகிறது. அதிலேயும் மாறுதல் இல்லை.
ஆனால், இதைப் புட்டுப் புட்டுக் காட்டி, தி. மு. கழகத்தில் புடம்போட்டு எடுக்கப்பட்ட வீரர்கள் உளர் என்று கூறி, நமது அரசு வேண்டும் என்ற எழுச்சியூட்டி, அதை உணர மறுக்கும் அமைச்சர் தாசர் புத்தி தலைக்கேறியவர்களின் தனிப்பெருங் தலைவர் என்று கண்டித்து, விடுதலைப் போர்ப் பரணி பாடியவரின், நிலையில்தான், நாம் யாரும் எதிர்பார்க்காத, ஆனால், நமது அரசியல் எதிரிகள் அடிக்கடி குத்திக் கிளறிக் காட்டிக்கொண்டு வந்த மாறுதல், ஏற்பட்டிருக்கிறது.
அவனுடைய நிலையில்தான், நம் நெஞ்சை வேகவைக்கும் மாறுதல் ஏற்பட்டிருக்கிறது தவிர, அவர் எடுத்துக்காட்டிய காரணங்களின் தரம் குறையவில்லை; ஆதாரங்கள் ஆபத்தங்களாகிவிடவில்லை; பூகோளம் பொய்த்துப் போய்விடவில்லை புள்ளி விவரங்கள் புகைந்து போய்விடவில்லை; அவை அன்றுபோல் இன்றும் அருமையாகத்தான் உள்ளன ! மறுக்கொணாதவைகளாகத்தான் உள்ளன ! உள்ளம்தான் மாறிவிட்டது; உண்மையுமா, மாறிவிடும்!! உண்மையின் இலக்கணமே அது அல்லவே.