7
அவர்களுக்கு ஒரே நோக்கம்—இந்த அண்ணாத்துரைக்கு இழிவுவந்து சேர்ந்தாகவேண்டும்—இதைச் சாதித்துவிட்டுத்தான் பிறகு, மற்றவை; முடிந்தால்; நேரம் கிடைத்தால்.
இந்தச் சாமரம் வீசியபடிதான், என்னை அரசியல் உலகிலே உலாவர வைத்தனர். எனக்கு அது பழக்கமாகவும் ஆகிவிட்டது.
அப்போதெல்லாம், இவ்விதமான கண்மூடித்தனமான கண்டனங்களை, இழிமொழிகளை, பழிச்சொற்களைக் கேட்டுக் கொதித்து, குமுறி, கோபம் கொப்பளிக்கும் நிலைபெற்று, ஆகுமா இந்த அக்ரமம்! அண்ணாவையா இப்படித் தூற்றுகிறீர்கள் ! அவர் நடையையா பழிக்கிறீர்கள் !—என்றெல்லாம் கேட்டு, பதிலளித்து, என்மீது விழும் தூசுகளைத் தன் அன்புக்கரத்தால் துடைத்து, என் அண்ணன் மாசுமருவற்றவன் என்று மகிழ்ந்து கொண்டாடியவர்களிலே, முதன்மை இடம், தோழர் சம்பத்துக்கு என்பதை நாடு அறியும்?
எனக்காக அந்த அரும்பணியாற்றியதற்கு, நான் செய்யக்கூடிய 'கைம்மாறு' என்ன இருக்கமுடியும் ?
உண்ணாவிரதத்தை முடிக்கும்போது, உள்ளே சென்ற பழரசம், விக்கலால் வெளியே வந்ததுகண்டு சிந்தினேனே கண்ணீர், அதுவா! தூ!! உப்புத்தண்ணீர்! உபயோகமற்ற தண்ணீர்! கண் என்று இருந்தால், கண்ணீர் வருகிறது—இது ஒரு பெரிய விஷயமா!!
கைம்மாறு ஏதும் செய்திட இயலாத நிலையில் இருந்தேன் இத்தனை காலம்—இப்போதுதான் அந்த வாய்ப்புக் கிடைத்திருக்கிறது; பெரியாரும் காங்கிரஸ்காரர்களும் என்னென்ன ஏசினார்களோ, அதை அப்படியே, சிந்தாமல் சிதறாமல் எடுத்துவைத்துக்கொண்டு தோழர் சம்பத் பேசுகிறார்—தாங்கிக்கொள்கிறேன்—அதுதான் நான் காட்டவேண்டிய 'கைம்மாறு' என்றும் கொள்கிறேன்.