70
வடநாட்டினின்றும் முற்றிலும் வேறுபட்டது என்பதை உணரலாம்."
"இப்பொழுது இருந்து வருகின்ற இந்தத் திராவிட இன ஒருமைப்பாட்டினை அவசரப்பட்டுப் பிரிக்கத் தேவையில்லை. சிலர் நம்மைப் பார்த்துப் பேராசைக்காரர்கள் என்று சொன்னாலும், கெக்கலித்து ஏளனம் செய்தாலும் நமக்குக் கவலை இல்லை, இந்தத் திராவிட இனத் தனிப்பண்பை—உணர்ச்சியை ஒரு அரசியல் சக்தியாக மாற்றக் கூடிய ஓர் சக்தி பிறக்கவேண்டும்."
"'தென்னக அரசியல்' என்ற தலைப்பில் நான் பேசும் போது, தென்னக அரசியல் என்பதை நானே கற்பனை செய்து கொண்டதாகச் சிலர் சொல்வார்கள்—'தென்னாடு—வடநாடு என்று பிரித்துப் பேசுவது குறுகிய மனப்பான்மை'—என்று."
"தெற்கு—வடக்கு என்பது நாம் புதிதாகப் பாகுபாடு காட்டுவதல்ல, இந்தியத் துணைக்கண்டத்தின் பண்பாடே அப்படித்தான் அமைந்திருக்கிறது. அதன் நீண்ட வரலாற்றை எடுத்துக்கொண்டால், அதிலே வடக்கு—தெற்கு பிரிந்து கிடப்பதைக் காணலாம். அரசியலிலும், கலையிலும் இன்ன பிற துறைகளிலும் இந்தப் பிரிவினையைக் காணலாம்."
"வெள்ளையன் தன் துப்பாக்கி முனையால் இந்தியத் துணைக் கண்டத்தைப் பிரித்து, மிச்சப்பட்டதை வடநாட்டு வெறியர்களிடம் கொடுத்து விட்டுச் சென்றான். 'ஏக இந்தியா' என்ற இந்தப் பரந்த நிலப் பரப்பை, பெரிய மக்கள் தொகையைக் கட்டியாள, வடநாட்டு ஏகாதிபதியவாதிகளால், இந்தியக் கலாச்சாரம்—இந்தியப் பண்பாடு—இந்திய ஒற்றுமை என்று இன்று பேசப்படுகிறது."