8
கோயில் மணி
சுப்பிரமணியர் கோயில் அர்ச்சகர்ஒன்றும் அறியாமல் விழித்தார்: “என்ன மாமா, இப்படிச் சொல்கிறீர்கள்? சுவாமி கனவிலே எப்படி வந்து சொன்னார்?” என்றார்.
“இது முதல் தடவை அல்ல. அவன் அடிக்கடி கனவில் வந்து உற்சாகம் மூட்டினான். அந்த அடையாளம் எனக்குத் தெரியாதா?”
“இவ்வளவு சிரமப்பட்டு உங்களுக்கு இல்லாமல் போவதா?” என்று ஒரு செட்டியார் கேட்டார்.
“நான் அல்லவா அதைச் சொல்ல வேண்டும்? எனக்காவது, உனக்காவது! இது பகவானுக்காக வந்தது. இதை அவன் சொல்கிற இடத்தில் கட்டவேண்டியதுதான் நியாயம். சுப்பிரமணிய சுவாமி மட்டும் நமக்குச் சொந்தம் இல்லையா? அவர் கோயிலும் இந்த ஊரில் தானே இருக்கிறது?” குருக்கள் குழப்பம் இல்லாமல் பேசினார்.
“சொத்துக்கு உடையவரே கொடுப்பதற்குத் தடை சொல்லாதபோது நாம் சொல்வதற்கு என்ன இருக்கிறது?” என்று நாலு பேர் சொன்னார்கள்.
கடைசியில் அந்த மணியை முருகன் கோயிலில் கட்டிடம் கட்டி வைத்துவிட்டார்கள். முத்துசாமி குருக்களுக்குச் சாமிநாத குருக்களிடம் உண்டான மதிப்புக்கு அளவே இல்லை; “மாமா, நீங்கள் பெரிய தியாகம் செய்துவிட்டீர்கள்!” என்று தனியே அவரிடம் சொன்னார்; கண்ணில் நீர் ததும்பச் சொன்னார்.
“உன்னால் எனக்கு ஒரு காரியம் ஆகவேண்டும். சாயரட்சை அபிஷேகம் ஆரம்பிக்கும்போது இந்த மணியை அடிக்கச் சொல்லு. தீபாராதனை ஆகும்போது வழக்கமாக அடிக்கட்டும். அபிஷேகம் ஆரம்பிக்கும்போது தவறாமல் அடிக்கச் சொல்ல வேண்டும்.”