40
கோயில் மணி
சிறிது நேரத்தில் பட்டுத் துணியில் கட்டியிருந்த மூட்டை ஒன்றைக் கொண்டு வந்தார். உட்கார்ந்து கொண்டு அதை அவிழ்த்தார். நான் உண்மையிலே ஆச்சரியப்பட்டுப் போனேன்; திடுக்கிட்டேன் என்றே சொல்ல வேண்டும். பட்டுத் துணியில் பாதுகாத்து வைத்திருந்த பொருள் என்னவென்று நினைக்கிறீர்கள்? ஒரு ஜோடிச் செருப்பு!
“என்ன சுவாமிகளே இது?” என்று சற்று உரக்கவே கேட்டுவிட்டேன்.
“இதுவும் அன்புக்கும் நன்றியறிவுக்கும் அடையாளம்!” என்றார் சாமியார்.
“இது எந்த ஆசிரியருடைய திருவடி நிலை?” என்றேன்.
“இது யாரும் அணியாதது.”
“ஏன் அணியவில்லை?”
“நான் அணிவதற்காகக் கிடைத்தது இது, ஆனால் அணியவில்லை. மதிப்புக்குரிய பொருளாகப் பாதுகாத்து வருகிறேன்.”
நான் ஒன்றும் தோன்றாமல் விழித்தேன். “இதன் கதை பெரியது; அதைச் சொல்கிறேன், கேட்கிறீர்களா?” என்று கதையைத் தொடங்கிவிட்டார்.
★
அந்த இடத்தில் நூறு குடிசைகளுக்கு மேல் இருந்தாலும் அந்தக் குடிசையை அடையாளம் தெரிந்து கொள்ளலாம். காலையில் எழுந்தவுடன் கந்தர் அநுபூதிப் பாராயண ஒலி அங்கே கேட்கும். காளிமுத்து எழுந்து நீராடித் திருநீறிட்டுக் கொண்டு இந்தப்பாராயணத்தைச் செய்வார். எது தப்பினாலும், இது தப்பாது. அவர்