பக்கம்:கோவூர் கிழார்.pdf/33

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

மாகப் பலர் இருந்தார்கள். ஆனால் அவர்களுக்கு அழைப்பு வரவில்லை.

பாண்டி நாட்டின் பகுதியாகிய கோனாட்டைத் தாண்டிப் படைகள் சென்றன. ஏழெயில் என்ற ஊரை அடைந்தன. இப்போது சிவகங்கைக்கு அருகில் ஏழுபொன் கோட்டை என்ற ஊர் இருக்கிறது. அதுவே முன் காலத்தில் ஏழெயில் என்ற பெயரோடு விளங்கியதென்று தெரிகிறது. அங்கே வந்தவுடன் அங்குள்ள கோட்டையின் பலத்தால் பாண்டியன் நின்று போரிட்டான். தன் படைகளை ஊக்கினன். பாண்டிய வீரர்கள் கோட்டையிற் புகுந்து கொண்டு அம்பு எய்தார்கள். அவ்விடத்தில் சோழன் படையில் சில வீரர் இறந்துபட்டனர். அதனால் எஞ்சியிருந்தவர்களுக்கு மான உணர்ச்சி மிகுதியாயிற்று. தம்முடைய முழு வலிமையையும் காட்டிப் போரிடத் தொடங்கினார். இரண்டே நாட்களில் கோட்டைக் கதவைப் பிளந்து கோட்டையைத் தம் வசப்படுத்திக் கொண்டனர்.

பாண்டியன் இந்த நிலையில் சற்று ஆழ்ந்து சிந்தித்தான். சேர மன்னனுடனும் ஆராய்ந்தான். இனிமேல் போரை நீட்டிப்பதனால் தங்களுக்குப் பயன் ஒன்றும் இல்லை என்பதை அவ்விருவரும் உணர்ந்துகொண்டனர். உடனே சோழனுடன் சமாதானம் செய்துகொள்ளுவதுதான் தக்க வழி என்று தெளிந்தார்கள். அதற்கு வேண்டிய முயற்சிகள் நடைபெற்றன.