பக்கம்:கோவூர் கிழார்.pdf/82

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

77

கிள்ளிவளவன் அந்தக் குழந்தைகளுக்கு அஞ்சுகிறானென்பது அவன் பேச்சினாற் புலனாயிற்று.

“எனக்கு ஒன்று தோன்றுகிறது. நம்முடைய படைத் தலைவரையோ, ஒற்றர் தலைவரையேர் கொண்டு அந்த இரண்டு பாம்புக்குட்டிகளையும் பிடித்துக்கொண்டு வரச்செய்யவேண்டும்.”

அமைச்சர்கள் திடுக்கிட்டனர். அரசன் இன்ன உள்ளக் கிடக்கையோடு பேசுகிறான் என்பது அவர்களுக்குத் தெளிவாகத் தெரியவில்லை. ஒருவர் முகத்தை ஒருவர் நோக்கி விழித்தனர்.

“நான் சொல்வது விளங்கவில்லையா? இந்த இரண்டு நச்சுப் பாம்புகளும் பெரியனவாகி மன்னர் குலத்தின் நெஞ்சிலே மாளாத அச்சத்தை ஊட்டுவதற்கு முன்னே, முளையிலே கிள்ளி எறிந்து...”

“இந்தக் குழந்தைகளையா!” என்று திடுக்கிட்டு ஒருவர் கேட்டார்.

குழந்தைகள் என்று ஏன் சொல்லுகிறீர்கள்? பாம்பிலே குட்டியென்றும், பெரிதென்றும் வேறுபாடு உண்டா, என்ன? பாம்பென்று சொல்லுங்கள்.”

அவன் தன் கருத்தை எடுத்துரைத்தான். காரியின் மக்களைப் பிடித்து வந்து ஒழித்து விட்டால் மலையமான் குலம் வேரொடு நாசமாகுமென்றும், அரசர்கள் அஞ்சுவதற்குக் காரணம் இல்லாமல் ஒழியுமென்றும் அவன் சொன்னான்.