பக்கம்:கோவூர் கிழார்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

79

உறையூரை அடைந்தார். சோழன், மலையமான் குழந்தைகளின் உயிருக்கு உலைவைக்கக் கருதியது அன்றுதான். நேரே கொலைக் களத்துக்கே போய்விட்டார் புலவர். குழந்தைகள் இருவரும் அழுது கொண்டிருந்தனர். எதிரே யானை வந்து நின்றது. அங்கே புலவர் ஒரு கணந்தான் நின்றார். கொலையாளிகளைப் பார்த்தார். “சற்று நில்லுங்கள். நான் மன்னரைப் பார்த்துப் பேசிய பிறகு அவர் சொல்வதுபோலச் செய்யலாம்” என்று சொல்லிவிட்டுச் சென்றார். உறையூரில் அவர் சொல்லைத் தட்டுகிறவர் இல்லை.

அரசன் தன் மாளிகையின் மேலே நின்று கொண்டிருந்தான். கோவூர் கிழார் அவனிடம் சென்றார். அவர் தன்னை நோக்கி வருவது அரசனுக்குத் தெரிந்தது. கீழே இறங்கி வந்து அவரை வரவேற்றான்.

“முன்பு அறிவிக்காமல் இவ்வளவு விரைவாகத் தாங்கள் வந்தீர்களே!” என்றான் அரசன்.

“ஆம். வரும்படி நீ செய்துவிட்டாய்” என்று. படபடப்போடு புலவர் சொன்னார்.

“நான் சொல்லி அனுப்பவில்லையே! ஆனாலும் நீங்கள் எப்போது வந்தாலும் வரவேற்கக் காத்திருக்கிறேன்!”

“நீ சொல்லியனுப்பவில்லை யென்பது உண்மைதான். நானாகத்தான் வந்தேன். அறம் என்னை இங்கே தள்ளிக்கொண்டு வந்தது. உறையூரில் அறம் என்றும் நிலைபெற்றிருக்கிறது. அது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோவூர்_கிழார்.pdf/84&oldid=1111127" இலிருந்து மீள்விக்கப்பட்டது