பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழர் வாழ்வியல்

45


ஆகவே, ஒருவன் உலகத்தில் மற்றையவரினும் நிறையப் பொருளீட்டியதன் பயனாவது, இல்லையென்றிரப்பார்க்குத் தன்னலங்கருதாமல் கொடுத்து மகிழ்தலேயாம். செல்வத்தை யாமே நுகர்ந்து மகிழ்வேம் எனச் செல்வர் கருதுவாராயின், அதனால் வரும் தவறுகள் பலவாம்.” எனத் தமிழறிஞர் அறிவுறுத்துவாராயினர். அதனால், தமிழ் நாட்டில் வாழும் வேந்தர் முதல் தொழிலாளர் ஈறாக எல்லாரும் தம் முயற்சியால் ஈட்டிய பொருளைக் கொண்டு, கலை வளர்க்கும் பரிசிலர்க்கும் வறுமையால் வாடும் இரவலர்க்கும் இல்லையென்னாது ஈந்து மகிழ்தலையே வாழ்க்கையில் தாம் பெறும் பேரின்பமாகக் கருதினர்.

கலைவாணர் தாம் கற்ற கல்வியினை உணர்ந்து பாராட்டும் நல்லறிவுடைய செல்வர்களை நாடிச் சென்று தம் கலைத் திறத்தால் அவர்களை மகிழ்வித்தனர்; பழுத்த மரங்களை நாடிச் செல்லும் பறவையினைப் போன்று, அருளாற் கனிந்தவுள்ளமுடைய செல்வர்களை அடைந்து, அவர்கள் தம் வரிசையறிந்து தரும் பரிசிற்பொருளைப் பெற்றுக் தம் சுற்றத்தாரைப் பாதுகாத்தனர். தாம் பரிசிலாகப் பெற்ற பொருளை இறுகச் சேர்த்துவைக்குமியல்பு அவர்கள்பால் இல்லை. வறுமையின் கொடுமையினை நன்குணர்ந்த அவர்கள், தம்மைப் போன்று பிறர்படுந் துயர்க்கிரங்கித் தம்பாலுள்ள பொருளை மனம் விரும்பி வழங்கும் இயல்புடையராயிருந்தனர். மக்களது நன்மதிப்பாகிய வரிசை பெறுதலையே வாழ்க்கைப் பேறாகக் கருதி வாழும் புலவர்கள், பிறர்க்கு எத்தகைய தீங்கும் எண்ணாத தூயவுள்ளம் படைத்தவர்களாவர். தாங்கள் கற்று வல்ல கலைத்துறைகளில் மாறுபட்டாரை வென்று தலை நிமிர்ந்து செல்லும்


1. புறம். 189