பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழர் வாழ்வியல்

59

எனத் தொல்காப்பியர் சிறப்பித்துரைப்பர். உலக வாழ்க்கையில் தாம் விரும்பிய உயர்ந்த குறிக்கோள்களை நிலைபெறுத்தல் கருதிய சான்றோர், வடக்கு நோக்கியிருந்து, உண்ணா நிலையினை மேற்கொண்டு, உயிர் விடுவர். இம்முறை ‘வடக்கிருத்தல்’ என வழங்கப்பெறும். வெண்ணிப் போர்க்களத்திற் கரிகால் வளவனுடன் பொருத பெருஞ் சேரலாதன், தன் மார்பிற் சோழன் எய்த அம்பு புறத்தே ஊடுருவிச் சென்றமையால், முதுகில் உண்டாகிய புண்ணினைப் புறப்புண் எனக் கருதி, வடக்கிருந்து உயிர் துறந்தான். சிறந்த பொருளைச் சிந்தித்துக் கோப்பெருஞ் சோழன் வடக்கிருந்த பொழுது அவனுடைய உயிர் நண்பராகிய பிசிராந்தையாரும் பொத்தியாரும் அவனுடன் ஒருங்கிருந்து உண்ணாது உயிர் துறந்தமையும், தன்னுடைய உயிர்த்தோழனாகிய பாரி வேளின் பிரிவிற்காற்றாது கபிலர் என்னும் புலவர் பெருமான் வடக்கிருந்து உயிர் துறந்தமையும் தமிழ் மக்களின் சிறந்த மனத்திட்பத்தை இனிது புலப்படுத்துவனவாம்.

‘ஒரு வீட்டிலே சாப்பறையொலிக்க, மற்றொரு வீட்டிலே மனமுரசியம்ப, கணவனைக்கூடிய மகளிர் நறுமணப் பூக்களை அணிந்து மகிழ, கணவனை இழந்த மகளிருடைய கண்கள் துன்பநீர் சொரிய, இவ்வாறு இன்பமும் துன்பமும் ஒவ்வாதபடி இவ்வுலகியல் அமைந்துள்ளது. துன்பத்தையே தனக்குரிய இயல்பாகவுடைய இவ்வுலகினது இயல்பறிந்தார், இவ்வுலகிலிருந்தே நிறைந்த பேரின்பமாகிய வீட்டின்பத்தைத் தரும் இனிய செயல்களை அறிந்து செய்து கொள்வாராக’, என அக்காலப் புலவர் பெருமக்கள் நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தினார்கள்