பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/427

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாவரங்கள்

411

‘செலவிடை அழுங்கல் செல்லாமை யன்றே வன்புறை குறித்த நவிற்சி யாகும்’ என்னும் தொல்காப்பிய நூற்பாவிற்கிணங்க (தொல்-கற்பியல். 14) வற்புறுத்திப் பிரிதல் வேண்டுமென்பது கொண்டு, முல்லைப் பெயரால் முல்லைப்பாட்டு என்ற நூல் எழுதினார் காவிரிப்பூம்பட்டினத்துப் பொன்வணிகனார் மகனார் நப்பூதனார். இதற்கு உரை கூறும் நச்சினார்க்கினியர்,

‘தொல்காப்பியனார் கருத்திற்கேற்ப நப்பூதனார் செய்யுள் செய்தார் என்றுணர்க. இவ்வாறின்றி ஏனையோர் கூறும் பொருள்கள் இலக்கணத்தோடு பொருந்தாமை உணர்க’ என்றார்.

முல்லைப் பெயர் கொண்ட அள்ளூர் நன்முல்லையார், காவல் முல்லைப் பூதனார் என ஆண்பால் புலவர் பெயர் கொண்டார்.

முல்லை நகை வடிவாள் என்பது திருமகேந்திரப் பள்ளி அன்னைக் கடவுளர்க்கு அமைந்த பெயர். அங்குச் சிவபெருமான் முல்லை வன நாதர் எனப்படுவர்.

திருமுல்லைவாயில், முல்லையூர், முல்லைக்காடு, முல்லைப்பாடி எனப் பல ஊர்ப் பெயர்களில் முல்லை இடம் பெற்றது.

ஊரைச் சுற்றிலுமே முல்லை மலரும் இக்கொடி வேலியாகப் படர விடப்பட்டது என்று சங்க நூல்கள் கூறும்.

“முல்லைவேலி நல்லூரானே”-புறநா. 144 : 14

“வேலி சுற்றிய வால்வீ முல்லை”-அகநா. 314 : 19

முல்லைக்கொடி, தோன்றிக் கொடியோடு படர்ந்து, வளர்ந்து கார் காலத்தில் இவ்விரண்டும் பூக்கும் என்று நாகன்தேவனார் கூறுவர்.

“காடு கவின்எதிரக் கனைப்பெயல் பொழிதலின்
 பொறிவரிஇன வண்டு ஆர்ப்பப் பலவுடன்
 நறுவீ முல்லையொடு தோன்றி தோன்ற”

-அகநா. 164 : 4-6


இவற்றுள் முல்லை மலர் வெண்மை நிறமானது. தோன்றி மலர் குருதிச் சிவப்பு நிறமானது. இவை இரண்டும் சேர்ந்து மலரும் போது, கண் களிகூரக் கவின் தரும். இவ்விருமலர்களையும் விரவிக் கட்டிய கண்ணியை முல்லை நில மாந்தர் சூடி மகிழ்வர் என்ப.