பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/723

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாவரங்கள்

707

என்ற அடிக்கு நச்சினார்க்கினியர், ‘கரிய பனங்குருத்தில் அலர்ந்த வலப்பக்கத்து ஓலையும்’ என்று உரை கண்டுள்ளார். இப்பனை ஓலையை மாலையாகவும் மார்பில் அணிவர். இதனைக் குறிக்கும் இடங்களில் ‘புடையல்’ என்ற சொல் ஆளப்பட்டுள்ளது. இப்புடையல் குறிக்கப்படும் இடங்களில் பெரிதும், கழல் அணிந்த கால் கூறப் படுகின்றது.

“இரும்பனம் புடையல் ஈகைவான் கழல்” -பதிற். 42 : 1
“புடையல் அம்கழற்கால்” -அகநா. 295 : 14

போர்க்களத்தில் போரிட்டுக் குருதி தோய்ந்துள்ளதைப் பாடும் இடத்திலும்,

“இரும்பனம் புடையலொடு வான்கழல் சிவப்ப
 குருதி பனிற்றும் புலவுக் களத்தோனே”
-பதிற். 57 : 2-3

சேரர்க்குரிய வீரச் சின்னங்களில் புடையலும், கழலும் இணைத்துப் பேசப்படுதலின், சேரர்க்குத் தாயமாக-உரிமைப் பொருளாக-தொன்மை மரபாக-முன்னோர் பழக்கமாகப் பாடுகின்றார் அவ்வையார்.

“தொன்னிலை மரபின் நின்முன்னோர் போல
 ஈகையங் கழற்கால் இரும்பனம் புடையல்”
-புறநா. 99 : 4-5

இத்துணைக்கும், இப்பனங்குருத்து மலரமைப்போ, மணமோ, சுவையோ அற்றது என்பதையும் கபிலர் அறியாமலில்லை.

“வண்டு இசைகடவாத் தண்பனம் போந்தை” -பதிற். 70 : 6

எனினும், ‘கண்ணிப்பூ நிலையில்’ போந்தையாகவும், தார்ப்பூ நிலையில் ‘புடையலாகவும்’ பெயர் பெற்றுள்ள சிறப்பிடம் இதற்கொரு தனித்தகுதியைத் தந்துள்ளது என்பார் கோவை இளஞ்சேரனார்[1].

பனையின் புடையலொடு வாகை மலரை இணைத்து வெற்றி கொண்டாடினார் என்று கூறும் பதிற்றுப்பத்து.


  1. இலக்கியம் ஒரு பூக்காடு : ப. 345