பக்கம்:சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள்.djvu/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



21 5. ஓரி இவன் மழவர் குடியிற் றோன்றிய பெருந்தகை என்பது 'வெம்போர்-மழவர் பெருமகன் மாவள் ளோரி கைவள மியைவ தாயினும் ஐதே கம்ம வியைந்துசெய் பொருளே' என்ற நற்றிணைப் பாடலால் அறியப்படுகின்றது. இவனை ஆதனோரி எனவும் வல்லில்லோரி எனவும் கூறுவர். கடைச்சங்க நாளில் நிலவிய கடையெழுவள்ளல்களில் இவனும் ஒருவன் என்பது 'முரசுகடிப்பிகுப்பவும்' என்னும் 158-ம் புறப்பாட்டானும் சிறுபாணாற்றுப்படையானும் நன்கு விளங்குகின்றது. இவன் கொல்லிமலையையும் அதனைச் சூழ்ந்த நாட்டையும் ஆண்டவன். இதனை , 'ஓரி-பல்பழப் பலவின் பயங்கெழு கொல்லி' (அகம்.208) எனவும், "வல்வில் லோரி கொல்லிக்குடவரை" (குறுந்தொகை 100) எனவும், 'கொல்வி யாண்ட வல்வில் லோரியும்' (புறம். 158) எனவும் போதரும் சங்கத்துச் சான்றோர் பாடல்களால் அறியலாம். இக்கொல்லிமலை, தேன், பழம் முதலாய உணவுப்பொருள்களும், இடையறாது நீரொழுகும் பல இனிய அருவிகளும் உடையது. கொல்லிக் கூற்றத்தில் யானைகள் மிகுந்திருந்தமையின் இவன் யானைத் தந்தங்கள் விற்று அதனாலும் பெரும்பொருள் ஈட்டி வந்தனனென்பது, 'கருங்கண் வேழத்துக் கோடுகொடுத் துண்ணும் வல்வி லோரிக் கொல்லிக் குடவரை' என்னுங் குறுந்தொகைப்பாடலால் அறியக்கிடக்கின்றது. இத்தகைய நாட்டிற்குத் தலைவனாக விளங்கிய நமது மழவர் பெருமானும் வருவாய் மிக்குடையவனாய் இரவலர்க்கு வரையாது கொடுக்கும் வண்மையனாய் இனிதுவாழ்ந்துவந்தனன். இவனது வள்ளன்மையை, ‘மாரி வண்மகிழ் ஓரி' (நற்றிணை 265) எனவும், 'மாவள்ளோரி கைவள மியைவ தாயினு மைதே கம்ம' (மேற்படி, 52) 1 எனவும்,