பக்கம்:சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள்.djvu/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



9. சம்புவராய மன்னர் வடக்கில் திருமால் எழுந்தருளியுள்ள வேங்கட மலையையும் தெற்கில் குமரிமுனையையும் கிழக்கிலும் மேற்கிலும் இருபெருங் கடல்களையும் எல்லையாகவுடைய இந்நிலப்பரப்பு முற்காலத்தே தமிழகம் என்னும் பெயரினையுடையதாக இருந்தது. இத்தமிழகம் சேரமண்டலம், சோழமண்டலம், பாண்டிமண்டலம் என்னும் மூன்று பெரும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுச் சேர சோழ பாண்டியர் என்னும் தமிழ் மூவேந்தர்களால் ஆளப்பெற்று வந்தது. இற்றைக்கு ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முன்னர், சோழமண்டலத்தின் வடபகுதி ஒரு தனி மண்டலமாக பிரிக்கப்பட்டுத் தொண்டைமண்டலம் என்னும் பெயரெய்தியது. இத்தொண்டை மண்டலத்தை அந்நாளில் அரசாண்டவர்கள் தொண்டைமான் மரபினர் ஆவர். இவர்கள் சோழரின் வழியினர்; இவர்கள் தம் குடி முதல்வராகிய சோழரைப் போல் ஆத்திமாலையைத் தமக்குரிய அடையாளமாலையாகக் கொள்ளாமல் ஒரு காரணம்பற்றித் தொண்டைமாலையைத் தம் அடையாள மாலையாகக் கொண்டமையின் 'தொண்டைமான்கள்' என்று அழைக்கப்பெற்றனர். இவ்வேந்தர்களுள் முதல்வன் தொண்டைமான் இளந்திரையன் என்பவன்; இவன் காவிரிப்பூம்பட்டினத்தைத் தலைநகராகக் கொண்டு சோழநாட்டை ஆட்சிபுரிந்த சோழன் கரிகாற் பெருவளத்தானது பெயரன்; சோழன் குளமுற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவனது மகன்; கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்னும் புலவர் பெருமானால் பாடப்பெற்ற 'பெரும்பாணாற்றுப்படை' என்னும் பிரபந்தங்கொண்டவன்; செந்தமிழ்ப் புலமையிற் சிறந்தவன்; திருமால் பக்தியில் ஒப்பற்றவன்; இவனும் இவனது வழித்தோன்றல்களும் காஞ்சிமா நகரைத் தலைநக ராகக்கொண்டு தொண்டைமண்டலத்தை ஆட்சிபுரிந்து வந்தனர். இவர்கள், மக்களாகப் பிறந்தோர் இவ்வுலகில் அடையக்கூடிய உயர்நிலைக்கு எல்லையாகத் 'தோட்டி முதல் தொண்டைமான்வரையில்' என்னும் பழமொழியில் வைத்து இன்றும் பாராட்டப்பட்டு வருதல் காண்க. இவர்களது ஆட்சி, கி.பி. நான்காம் நூற்றாண்டு வரையில் தொண்டைமண்டலத்தில் நடைபெற்றது. அந்நூற்றாண்டின் தொடக்கத்தில் போர் விருப்பம் வாய்ந்த பல்லவர்கள் வடக்கேயுள்ள ஆந்திரநாட்டிலிருந்து தமிழகத்தின்மீது படையெடுத்து வந்தனர். அவர்கள் முதலில் காஞ்சிபுரத்தைக் கைப்பற்றிக்கொண்டனர்; பின்னர் தொண்டைமண்ட லத்தையும் பிடித்துக்கொண்டு அரசாளத் தொடங்கினர். பல்லவர்களும் தொண்டைமண்டலத்தை அரசாண்ட காரணம்பற்றித் தொண்டை மான்கள் என்றழைக்கப்பெற்றனர். கி.பி.830 முதல் 854 வரையாண்ட தெள்ளாறெறிந்த நந்திவர்ம பல்லவன் மேற்பாடப்பட்ட நந்திக் கலம்பகத்திலும் அவ்வேந்தன் 'தொண்டையந்தார்' மன்னன் என்றும் 'தொண்டைமான்' என்றும் புகழப்பெற்றிருத்தலுக்குக் காரணம்