பிற்பகல்165
அவர் சொல்லும்போது, “ஒங்களுக்கு என்னைத்தான் விரட்டத் தெரியும். ஆனால் இந்த சங்கரை மட்டும் நீங்க கண்டுக்கமாட்டீங்க. பயம், பேரு மட்டும் ஜெனரல் மானேஜர்! போங்க...” என்று சொல்லி அவர் தலையை அவள் கோதிவிட்டதும், ஜி.எம்.மால் மேற்கொண்டு கண்டுக்காமல் இருக்க முடியவில்லை. தான் ஜி எம். என்பதைக் காட்டத் துடித்தார். வார்னிங் மெமோவை அவள் கண்முன்னாலே டிக்டேட் செய்து அவள் கண் முன்னாலே கையெழுத்துப் போட்டுவிட்டார்.
அதற்குள் எதிர்பாராத ஒன்று நடந்துவிட்டது.
ஜி.எம்.மின் ‘மெமோவைக்’ கொடுக்கப்போன பியூன், சந்தேகம் ஏற்பட்டு சங்கரின் அறைக்கதவைப் பலவந்தமாக திறந்து பார்த்தான்.
சங்கர் செத்துக் கிடந்தான்—தற்கொலை!
விஷயத்தைக் கேள்விப்பட்ட பப்ளிஸிட்டி மானேஜர் சுந்தரம், மோகினியிடம் சொல்லாமலே அவன் அறைக்கு ஓடினார். ஆசாமி தற்கொலைக்கான காரணத்தை எழுதி, அதில் தன் பெயர் இருந்தால் என்ன செய்வது என்று பதறியவராய், அப்படி ஏதாவது காகிதம் இருந்தால் அதை அகற்றவேண்டும் என்பதற்காக ஓடினார். சிலர் அவர் படபடப்பை அன்பின் அடையாளமாக, பாசத்தின் சின்னமாக பாவித்துக் கொண்டார்கள்.
மோகினி பேசவில்லை. அவளுக்குக் கொஞ்சம் உறுத்தல் தான். அவள் காதுபட ஊழியர்கள் ‘பச்சையாகப்’ பேசிக்கொண்டு போவது அவளுக்கே கேட்டது. “தூக்குப் போட்டு சாகவேண்டியவளே சாகாம இருக்கையில இவர் ஏன் செத்தார்?” என்று சிலர் கூறுவது கேட்டது. சிறிது சத்தமாகப் பேசிய கிளார்க் குமாரை மட்டும் அவள் மனதுக்குள் குறித்துக்கொண்டாள்.
டெலிபோன் அடித்தது.