இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தன்மானத் தத்துவத் தேர்
சிலையாக நிற்கின்ற அண்ணா வுக்கும்
- சினவேங்கை பெரியார்க்கும் உவமை சொன்னால்
அலையண்ணா உலைபெரியார்! இந்நூற் றாண்டை
- அடைத்த புகழ் கொண்டவர்கள் இரண்டு பேரும்!
தலைநரைத்த பெரியாரோ இந்த நாட்டின்
- தன்மானத் தத்துவத்தேர்; கிரேக்க வீரன்
அலெக்சாந்தர் போர்க்களத்தில் தோற்ற தில்லை;
- அவனைப்போல் பெரியாரும் தோற்ற தில்லை.
- களைக்கொட்டைப் போல்தலைவர் இந்த நாட்டில்
- கணக்கெடுத்தால் ஆயிரம்பேர்; சமுதா யத்தைத்
தலைகீழாய்ப் புரட்டிவைத்த ராம சாமி
- தன்மானப் புல்டோசர், இவர்க்கு முன்னால்
மலைபோன்ற மதமடமை சாதிக் குன்றம்
- மண்ணாக நாம்கண்டோம்; பணத்துக் காக
விலைபோக விரும்பாத தலைவர்; தேர்தல்
- விட்டில்கள் விரும்பிவந்த விளக்குக் கம்பம்.