சந்திரமோகன்
113
காகப் : பரத கண்டத்திலே பல பாகங்களிலிருந்து பிராமணோத்தமர்களை வரவழைத்துச் சமாராதனை நடத்தி தட்சணை தரவேண்டும்.
சிவா : சாஸ்திர விதிப்படிதானா அதுவும்?
காகப் : ஆம்! தானாதி காரியமூலம் ஆசிர்வாதம் பெற்று உன் பாவத்தை நீ கழுவிக் கொள்ள வேண்டும்.
சிவா : பாவமா? எனக்கா? நான் வஞ்சிக்க வில்லையே. பொய்யனல்லவே. புரட்டனல்லவே?
காகப் : நீ பஞ்சமா பாதகத்திலே மிஞ்சியதாம் கொலை பாதகத்தைச் செய்தவன்.
சிவா : யாரை?
காகப் : களத்திலே பலரை.
சிவா : சரி! பிறகு நடக்க வேண்டியதைக் கூறும்.
காகப் : ஹோமம்.
சிவா : விறகு, நெய்.
காகப் : மலை உயரம் விறகு; மடு ஆழம் நெய்.
சிவா : பிறகு?
காகப் : துலாபாரம்.
சிவா : துலாபாரமா?
காகப் : ஆம்! உன் எடைக்கு எடை நவரத்தினங்கள், தங்கம், வெள்ளி முதலிய உலோகங்கள், பட்டு முதலியன நிறுத்தி தானம் செய்ய வேண்டும்.
சிவா : யாருக்கு? ஏழைகளுக்கா?
காகப் : இல்லை... பிராமணர்களுக்கு.
சிவா : மராட்டியர் ராஜ்யம் சம்பாதிக்க உழைத்தனர்; பிராமணர்கள் பட்டாபிஷேக வைபவத்திலே உண்டு களிப்பதா? இது எந்த வகையான நியாயம்?