9
விழுமியது, வளமுள்ளது என்ற விரிந்த மனப்பான்மை அவர்களிடையே தோன்றவேண்டும். நாம் வாழப் பிறந்துள்ளோம் என்பதை அவர்கள் உணரவேண்டும்.
மானைக் கொல்லப் புலியார் ஏன் விரும்புகிறார்? மானைக் கொன்றால்தான் புலியார் வாழ முடியும். நம்மைச் சுரண்டித்தான் பிர்லாக்கள் பிழைக்கவேண்டும் என்ற நிலையிருந்தால், நாட்டுக்கும் காட்டுக்கும் என்ன வித்தியாசம்? இப்பொழுது மனமாற்றம் நிச்சயமாகவேண்டும். ஏற்படுத்துகிறார்களா அறிஞர்கள் -- படித்தவர்கள்? இல்லை!
ஹிந்து பத்திரிகையைப் படிப்பது பாமரர்களல்ல; படித்தவர்கள் -- பாராளுமன்றத்திலே இருக்கும் உறுப்பினர்கள். ஹிந்து பத்திரிகையின் அன்றாட நிகழ்ச்சியிலே அவர்கள் என்ன காண்கிறார்கள்?
வேண்டுமா பட்டியல்? இதோ!
திருவல்லிக்கேணியிலே -- கீதார்த்த தத்துவம்.
புரசவாக்கத்திலே -- சீதாகல்யாணம்.
மயிலையிலே -- அனுமான் சேதுபந்தனம்.
மாம்பலத்திலே -- ஒரு இடத்தில் ஜீவன் முக்தி விவேகத்தைப்பற்றி விளக்கம்,
மற்றொரு இடத்திலே -- கம்பி ராமாயண உபந்நியாசம்.
அடையாற்றிலே பயங்கரதேவ வழிபாடு.
சென்னை பேசுவது இதுமட்டுமல்ல; தெருவுக்குத் தெருவு திருப்புகழ் பஜனை, தெருவுக்குத் தெருவு உடுக்கைச் சத்தம், வீதிக்கொரு பிள்ளையார் கோவில் இப்படி இருந்தால் இந்த நாட்டில் எப்படி லெனின் பிறப்பான்? எப்படி மா சே துங் பிறப்பான்?
என்னதான் தஞ்சாவூர் சம்பா -- அருமையான விதையாக இருந்தாலும் -- பதமான விளைதான் என்று பாறையிலே தாவினால் அது விளையுமா? விளையாது,