111
உரையில் வரும் பகுதிகள் திருவாலவுடையார் திருவிளையாடலை நினைப்பூட்டுகின்றன. “இராசாவை நோக்கி இஃது ஆகாது என்று பிள்ளையார் விலக்கியருள இராசாவையும் பிள்ளையாரையும் கூட வைத்து மகேசுவர கணபதித் தொண்டர்கள் அருளிச் செய்வார். பிள்ளையார் கொன்றாராகச் சொல்லியது படை செய்த பராக்கிரமம். அமணர்கள் நரகக் குழியிற் புக்கது, பிராமணச் சிறுபிள்ளை தேசாந்தரத்தில் நின்றும் வந்து மதுரைக்குப் புறத்தே ஒரு மடத்திலே விட அம்மடத்தின் வாசலிலே அநியாயமாக நெருப்பிட்ட பாவத்தால் என வுணர்க,” என்பது பழைய உரைக்குறிப்பு.
தொண்டர்கள் என்ன பேசினாரென அறியோம். கழுவேறப் பண்ணினார்கள் போலும். ஆனால், அமணர்கள் தம் பொய்யாமை பொய்யாதபடி தாமே கழுவேறினார்கள் என்பது போல ஒட்டக்கூத்தர் பாடினார் எனக் கருத இடம் உண்டு. “அமணர் தாம் கழுவேறுதற்குக் காரணம் பொய் சொல்லா விரதமென வுணர்க” என்பர் உரை ஆசிரியர். “எண்ணாயிரவர் அமணர்கள்; அவர் எதிரே சைவர்கள் நாற்பத்தெண்ணாயிரவர்” என ஒட்டக்கூத்தர் கலைமகள் பாடுவதாகப் பாடி முடிக்கிறார்.
சேக்கிழார் ஒட்டக்கூத்தர் போக்கையும் பின்பற்றுகிறார். ஆனால் கழு ஏறிய கதை நிலைபேறடைந்து விட்டதன்றோ? அவர் என் செய்வார்?