பக்கம்:சரிந்த சாம்ராஜ்யங்கள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. பி. சிற்றரசு

47


இந்த பரிதாப சம்பவத்திற்குக் காரணமாக இருந்தவள் அசோகனின் இரண்டாவது மனைவி சிட்சரக்ஷதை. இவள் தன் கணவனின் முதல் மனைவி அசந்திமத்திரையின் மகனான குணாளனிடம் காதல் பிச்சைக் கேட்கிறாள். எவ்வளவோ தான தருமங்களைச் செய்திருக்கிற அசோகனின் மகன் தன் சிற்றன்னைத் தகாத முறையிலே தன்னிடம் நடந்துகொள்ள ஆசைப்படுகிறாள் என்று தெரிந்தவுடன் வெறுக்கிறான். அவள் விருப்பத்தை நிறைவேற்ற முடியாதென மறுக்கிறான். உடனே உண்மையை அடியோடு மாற்றி குணாளனைப் பழி தீர்த்துக் கொள்கிறாள். அவள் பழி தீர்க்கும் படலத்திற்குப் பரிசாக தன் அருமைக் கண்களையே பரிசாகத் தந்துவிட்டான் மாபெரிய மெளரிய சாம்ராஜ்யாதிபதியின் மகன் குணாளன். குணாளன் பேரழகா, சிக்ஷரக்ஷதையின் தகாத விருப்பமா என்ற உண்மை இரண்டாவது இடம் பெறுகிறது. ஆனால் தள்ளாமையில் திருமணம் செய்து கொள்வது எவ்வளவு அபாயமானது என்பதைக் காட்டும் நிகழ்ச்சியே இதில் முதலிடம் பெறுகிறது. இந்த கோர சம்பவத்தோடு அசோகன் ஆட்சி சக்கரம் சுழன்று நிற்கிறது.

தசரதன்

அசோகனின் பேரன் எட்டு ஆண்டுகள் ஆண்டான். ஆட்சிக் கோடுகள் கலைந்தன. பல சிற்றரசர்கள் தோன்றினர். ஆட்சி ஆட்டங்கண்டது.

கொலையுண்ட பிரஹதத்தரன்

இவன் தசரதன் மகன். இவனுடைய ஆட்சிகாலத்துக்குள் மந்திரி சபையிலே ஆரியர்கள் அதிகமாக இடம் பிடித்துவிட்டனர். அவர்கள் சொல்வழி நடக்க