சாமியாடிகள்
173
சாமியாடிகள் 173
"முட்டாப்பயல. அவள் நம்ம பொண்ணா இருக்கலாம். அதுக்காவ நடுத்தெருவுல அடிக்க நமக்கு உரிமை இல்ல. ஒனக்கும் இது ஆகாதுழா. நம்ம கரும்பட்டையான்குடும்பத்த தலை குனிய வைக்க நீ ஒருத்தியே போதும் போலுக்கே."
மாயாண்டி, மகளை இழுத்துக் கொண்டே வீட்டைப் பார்த்து நடந்தார். "இனிமேல் நீ பீடி சுத்துனது போதும். வீட்லயே கிட" என்று சொன்னபடியே மாட்டை இழுப்பதுபோல் இழுத்துக் கொண்டு போனார். இதைப் பார்த்த ஏசெண்டு சிரித்தபோது, அத்தனை அடியிலும் இழுவையில் கத்தினாள் வாடாப்பூ
"ஏல பொந்துப் பயலே. கோள் சொல்லி. லேசா சிரில. இல்லன்னா அப்புறம் பலமா அழப்போறே."
மகளை இழுத்துப்போன மாயாண்டி, மீண்டும் அவளை அடித்தார். அடித்தபடியே இழுத்துக் கொண்டு போனார்.
பீடி ஏசெண்டுக்கு அதற்குமேல் அங்கிருக்கப் பிடிக்கவில்லை. இந்த வாடாப்பூ இப்படிப் பேசுறதுக்கு அவள் அப்பாதான் அடிக்காரே தவிர, இந்த கரும்பட்டையான்கள் அவளைப் போய் அடிக்கல. அவள் இப்டி திட்டிட்டுப் போனாலும். அவள அதட்டல. நம்ம சொல்லு விழலுக்கு இரச்ச நீர் காட்ல பெய்த மழை. தூள் இல்லாத பீடி.
ஏசெண்டு வெறுப்போடு நடந்தான். சுடலைமாடன் கோயிலை ஒரங்கட்டிப் பார்த்தபடியே நடந்தான். ஒருவேளை, அந்தக் கோயிலில் கூடி நிற்கும் செம்பட்டையான்கள் அவர்கள் பெண்களை கடையில் இருந்து விலக்கியதற்காக அடிக்க வருவார்களோ என்று பயந்தான். அவர்களோ அவனைப் பார்த்தாலும் பார்க்காதது மாதிரி தங்களுக்குள்ளே சிரித்தார்கள். அதுதான் அவனுக்குச் சங்கடமாக இருந்தது.
ஏசெண்டு புளியந்தோப்பு வழியாக நடந்தான். ரஞ்சிதம் போட்டி பீடிக்கடையைக் கொண்டு வருவாள் போலுக்கு. அப்டி வந்துட்டால் காத்துக் கருப்பிகளை குடும்பத்துக்காரன் என்ற முறையில்கூட விரட்ட முடியாது. ஒவ்வொருத்தியும் ஒரு வாடாப்பூவாய் ஆயிடுவாளுவ.