பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சாயங்கால மேகங்கள்

223

எப்போதும்போல் அவள் அங்கே வந்து போகவேண்டுமென்று வற்புறுத்திச் சொல்லியிருந்தான். அவன் வார்த்தையை மதித்துதான் அவள் அங்கே வந்து போய்க்கொண்டிருந்தாள்.

பூமி ஒவ்வொன்றாக எண்ணிப் பார்த்தான். தன்னோடு அவள் பழகத் தொடங்கிய நாளிலிருந்து நடந்த சம்பவங்கள் ஒவ்வொன்றாக அவன் நினைவுக்கு வந்தன. தனது ஆட்டோவில் அவள் மறதியாய் விட்டுச் சென்ற பண்டடங்களை நாணயமாகத் திருப்பிக்கொண்டு போய்க் கொடுத்ததனால்தான் அவனுக்கு அவளுடைய பழக்கமும் நட்பும் கிடைத்தன. ஆனால், அவனுடன் பழகிய அவளுடைய நாணயத்தையே முத்தக்காள் சந்தேகப்படும்படி ஆகியும் சித்ரா அதில் உடனே மனங்குலைந்து அழிந்து போய்விடவில்லை.

தன்னால் அவள் முத்தக்காளைப் போன்ற ஒரு மத்திய தா வயதுப் பெண்ணிடம் அவமானப்படுமாறு நேரிட்டது. இதை எல்லாம் அவள் பொறுத்துக்கொள்ளுவதும் சகித்துக் கொள்வதும் எல்லரம்கூடத் தனக்காகத்தான் என்பது அவனுக்குப் புரிந்தது. உடனே சித்ராவைச் சந்தித்து அவளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் போலிருந்தது. ஆனால் அது முடியவில்லை.

சிறிதுநேரம் மெஸ்ஸில் கழித்த பின் காணாமல் போன பையனைத் தேடி அன்று இரவிலும் அவன் நண்பர்களோடு அலைய வேண்டியிருந்தது. இதில் முத்தக்காளின் விமர்சனத்தையோ, குறை கூறலையோ அவன் சிறிதும் பொருட் படுத்தவே இல்லை.

இரவெல்லாம் அலைந்துவிட்டு மறுநாள் காலையில் அவள் சித்ராவைப் பார்ப்பதற்காக அவள் வீட்டுக்குப் போனான்.

அவன் போனபோது அவள் தரையில் அரும்புகளைக் குவித்துப் பூத்தொடுத்துக் கொண்டிருந்தாள். பூமி சிரித்துக் கொண்டே அவளைக் கேட்டான்: “நேற்று முத்தக்காள் சண்டை பிடித்ததை ஏன் என்னிடம் சொல்லவில்லை?"