பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சாயங்கால மேகங்கள்

261

அத்தனை பெரிய நகரத்தைக் கோழையாக்கி, நாகரிகத்தை நொண்டியாக்கிக் காட்டுமிராண்டித்தனம் பண்ணிக் கொண்டிருந்த ‘மன்னாரு’ கும்பலைப் பூண்டோடு வேரறுக்க வேண்டும் என்று மனத்தில் உறுதி செய்து கொண்டான் பூமி.

ஏற்கெனவே மெஸ்ஸிலிருந்து இந்தப் பையன் திடீர் என்று காணாமல் போனது பற்றிப் போலீஸில் புகார் செய்திருந்ததை ஒட்டி இப்போது மேல் விவரங்களைச் சொல்லி மன்னாருவின் அராஜகங்களுக்குக் கேந்திரமான அந்தத் தீவுக் கிராமத்தையே போலீஸ் ரோடு வளைக்க வேண்டும் என்று அவன் எண்ணினான். முன்னிரவில் தான் புறப்படும் போதே கவலையோடும், தயக்கத்தோடும் வழியனுப்பிய சித்ராவும், அந்தப் பையனின் தாயும் இப்போது உறக்கமின்றித் தவித்துக் கொண்டிருப்பார்கள் என்று தோன்றியது. போலீஸ் ஸ்டேஷனில் தகவல் தெரிவித்து விட்டு அப்புறம் சித்ராவைப் பார்க்கப் போக வேண்டுமென்று எண்ணியிருந்தான் அவன்.

ஆனால் போலீஸ் நிலையத்திலேயே அவனுக்கு ஆச்சரியம் காத்திருந்தது. அவன் போய்ச் சேர்ந்த போது போலீஸ் ஸ்டேஷனிலேயே சித்ரா இருந்தாள். பூமி புறப்பட்டுப் போய் வெகுநேரமாகியும் திரும்பாததால் பயந்து பதறிப் போலீக்குத் தகவல் தெரிவிக்க வந்திருந்தாள் அவள்.

“நான் என்ன காணாமல் போவதற்கோ, தொலைந்து போய் விடுவதற்கோ பச்சைக் குழந்தை என்று நினைத்தாயா சித்ரா?”

“அதுக்கில்லை? நீங்க போய் ரொம்ப நேரமாச்சு? ஒரு தகவலும் தெரியலே. தூக்கமும் வரலே. ஒரே பயம். என்னென்னவோ பயங்கரமான கற்பனைகள் வேறே.”

பூமிக்கு அவள் இதயம் புரிந்தது. அதிலிருந்த உரிமையின் ஆழமும் அன்பின் பரப்பும் புரிந்தன. ஒரு போதைப் பெண் தன்

சா-17