பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

117



மாணிக்கம் கண்களில் உருண்டு திரண்ட, நீர் கன்னக்கதுப்புகளில் உருண்டோடி விழாமல் இருப்பதற்காக, முகத்தை பின்னோக்கிச் வளைத்தார். வளைந்துபோன வாழ்க்கையை சொல்லாமல் சொன்ன வளைவு. ஆனாலும் அது வாழ்விற்காக கும்பிடுபோடும் முன் வளைவாகாமல், அதன்மேல் அம்பெய்யும் பின்வளைவாய் தோன்றியது. மேல் நோக்கி எழுந்த வெள்ளைக் கலவையான கருந்தாடி, கடற்கரை காற்றில் நாற்றுகளாய் ஆடின. உள்ளடங்கிய கண்கள் கண்ணீரில் மிதந்தன.

மாணிக்கத்தைப் பற்றி அவருக்குத் தெரிந்ததைவிட, தனக்கே அதிகமாகத் தெரியும் என்பது போல், பர்வின் அவரை கனிவோடு பார்த்தாள். இ.ஆ.ப. - அதுதான் சகலகலாவல்ல ஐஏஎஸ் தேறி, தமிழக அரசிற்கு மாநில ஒதுக்கீடாகி, ஒரு மாவட்டத்திற்கு, களப்பணிப் பயிற்சிக்காக இந்த பர்வின் அனுப்பப்பட்டபோது, இந்த மாணிக்கத்தைத்தவிர, அத்தனை மாவட்ட அதிகாரிகளும், தங்களது எதிர்கால ஆட்சித் தலைவர், இப்போதே, தங்களை ஆட்டிப் படைக்கலாம் என்பதுபோல் தலைகளை கவிழ்த்து, பாதி வாயை உள்ளங்கையால் மறைத்து 'பயிற்சி' கொடுத்த போது, இந்த மாணிக்கம்தான், இவளிடம் கெஞ்சாமலும் மிஞ்சாமலும், பல்வேறு அரசு செயல்பாடுகளில் பயிற்றுவித்தவர். வீட்டிற்கு கூட்டிப் போய், கணிப்பொறி மகளை தோழியாக்கியவர். அளவெடுத்த வார்த்தைகள்... அதற்கேற்ப கம்பீரமும் குழைவும் சரியான விகிதாச்சாரத்தில் கலந்த குரல். குரலுக்கு ஏற்ற பார்வை. 'வாங்க' என்ற ஒற்றைச் சொல்லில், தாயின் பரிவும், தனயனின் துணையும் உள்ளடங்கி இருக்கும். நிற்கவேண்டிய ஊழியர்களையும் உட்கார வைப்பார். ஒரு செயல்பாடு சாதனையானால், மேலதிகாரிக்கு எழுதும் கடிதங்களில், உதவிய ஊழியர்களை 'மற்றும் பலர்' ஆக்காமல், அவர்களது பெயர்களையும் தெரிவிப்பவர். அந்த மனிதர் இப்போது கூனிக்குறுகி முகம் பழுத்து தோள்கள் தொங்கி, எலும்புக்கூடாய் நிற்கிறார். சிறியன சிந்தியாதவர்கள், சிறுமைப் படும்போது, அதைப் பார்ப்பதே ஒரு தண்டணை. அந்தத் தண்டனையை அனுபவித்துக் கொண்டே, பர்வின், அந்தக் கோப்புக்களைக் தட்டிக்கொடுத்து அவரை ஆற்றுப் படுத்தினாள்.