பக்கம்:சிந்தனையாளன் மாக்கியவெல்லி.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

105


இந்த ஏற்பாட்டின்படி பேய்த்தலைவர் பெல்பாகர் பணத்துடன் பூலோகத்துக்குப் புறப்பட்டார்.

பெல்பாகர், தன் பூதகணங்களைத் தனக்குக் குதிரைகளும், வேலையாட்களும் ஏற்பாடு செய்து தரும்படி உத்தரவிட்டு, பெருத்த ஆடம்பரத்துடன் பிளாரென்ஸ் பட்டணத்திற்குள் நுழைந்தார். எத்தனையோ ஊர்கள் பூலோகத்தில் இருக்கும் போது அவர் பிளாரென்ஸ் பட்டணத்தை ஏன் தேர்ந்தெடுத்தார் என்றால், அங்குதான் தம் பணத்தைக் கெட்டிக்காரத்தனமாகச் செலவழிக்க முடியும் என்று அவருக்குத் தோன்றியது. காஸ்டிலி தேசத்து ரோடரிக் பிரபு என்ற பெயருடன் அவர் ஒகின் சாந்திப் பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்குப் பிடித்துக் கொண்டார். தம்மைப் பற்றி மற்றவர்கள் துருவி, ஆராய்ந்து விடாமலிருப்பதற்காக, தாம் அண்மைக் காலத்தில் ஸ்பெயின் தேசத்தை விட்டுப் புறப்பட்டு சிரியாவுக்குப் போய், அலெப்போல் பட்டணத்தில் பணம் சம்பாதித்து வந்ததாக எல்லோரிடமும் கூறினார். நல்லவர்கள் கூட்டுறவில் வாழ வேண்டுமென்பதற்காகவும், தம் மனத்திற்குப் பிடித்திருந்தது என்பதற்காகவும் இத்தாலி நாட்டிற்கு வந்து அங்கேயே ஒரு நல்ல பெண்ணைத் திருமணம் புரிந்து கொண்டு வாழ்க்கை நடத்த எண்ணியிருப்பதாகவும், கூறினார். ரோடரிக் பிரபு முப்பதே வயதுள்ள அழகான ஓர் இளைஞராகத் தோற்றமளித்தார். சீக்கிரத்தில் தாம் பெரிய பணக்காரர் என்று மற்றவர்கள் கருதும்படி பகட்டாக நடந்து கொண்டார். தாம் தாராள மனப்பான்மையும் தரும குணமும் உடையவராகக் காட்டிக் கொண்டார்.

ஏராளமான பெண்களையும் குறைவான சொத்துக்களையும் பெற்றிருந்த பல உயர் குலத்தினர், தங்கள் பெண்களில் ஒருத்தியை அவருக்கு மணம் புரிந்து கொடுக்க முன் வந்தார்கள். அப்பெண்கள் எல்லோரிலும் மிக அழகுடையவளும், அமெரிகோ டொனாட்டி என்பவரின் மகளும், “யோக்கிய வதி” (ஹானெஸ்டா) என்ற பெயருடையவளுமான ஒரு பெண்ணைத் தமக்கு மனைவியாகத் தேர்ந்தெடுத்தார் ரோடரிக் பிரபு. அவருடைய வருங்கால மாமனார் பிளாரென்ஸ் பட்டணத்திலேயே மிகவும் மதிப்பு வாய்ந்த உயர் குலத்தைச் சேர்ந்தவர். ஆனால் ஏழு பிள்ளைகளைப் பெற்ற அவர், தம் உயர்குலத்திற்குத் தகுந்தபடி ஆடம்பரமாகத் தொடர்ந்து வாழ்க்கை நடத்தி வந்தபடியால் வறுமைக்காளாகிவிட்டார்.