பக்கம்:சிந்தனையாளன் மாக்கியவெல்லி.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

மாக்கியவெல்லி தன் பதவியிலிருந்து விலக்கப்பட்டதும், பிளாரென்ஸிலிருந்து பனிரெண்டு மைல் தூரத்தில் இருந்த சான்காசியானோ என்று ஊருக்கருகில் இருந்த தன் பண்ணைக்குச் சென்று விட்டான். அதுவரையில் அரசாங்கத்திலிருந்து வருவாய் வந்தது. அவனுடைய வாழ்க்கை எவ்விதமான கஷ்டமுமின்றிக் கழிந்தது. ஆனால், பதவியைத் துறந்து பண்ணைக்குச் சென்ற பிறகோ அவனை வறுமை பிடுங்கித் தின்ன ஆரம்பித்து விட்டது. தாங்க முடியாத வறுமையில் அவனும் அவன் குடும்பத்தினரும் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தனர்.

அவன் தன் வாழ்க்கை நிலையை விளக்கி ரோமாபுரியில் தூதராயிருந்த அவனுடைய நண்பர் பிரான்செஸ்கோ விட்டோரி என்பவருக்கு அடிக்கடி கடிதங்கள் எழுதியிருக்கிறான். அந்தக் கடிதங்களிலிருந்து அவனுடைய தனிமைக் காலத்து அன்றாட நிகழ்ச்சிகளையும், வறுமையின் படப்பிடிப்பையும் அவன் கருத்தில் தோன்றிய எண்ணங்களையும் நாம் காண முடிகிறது.

"சூரியன் தோன்றும் பொழுதே நான் எழுந்து விடுவேன், எனக்குச் சொந்தமான சிறு காட்டுக்குப் போவேன். அங்கேயுள்ள மரங்களை வெட்டும்படி ஏற்பாடு செய்திருக்கிறேன். அங்கு மரம் வெட்டியவர்களோடு சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு, நீரோடைப் பக்கமாகப் போவேன். நீரோடையை விட்டு, தோப்புப் பக்கமாகச் செல்வேன். என்னுடைய மேல் சட்டைக்கு அடியில் நான் வழக்கமாகக் கொண்டு செல்லக்கூடிய கவிதை நூலை எடுத்து வைத்துக் கொண்டு படிக்க ஆரம்பிப்பேன். பெரும்பாலும் அவை மகாகவிகள் தாந்தே, பெட்ரியார்ச் ஆகியோரின் நூல்களாகவோ அல்லது கவிடி புல்லஸ், ஓவிட் ஆகியவர்களின் நூல்களாகவோ இருக்கும். அவர்களுடைய ஆசைக்கனவுகளையும், அவர்களுடைய காதற்கதைகளையும் படித்து, அவற்றை என்னுடைய வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டே நீரோடைப்பக்கமாக உலவிக் கொண்டிருப்பேன்”.

இது மாக்கியவெல்லி தன் நாட்டு வாழ்க்கையைத் தொடங்கிய ஆரம்பகாலத்து நிகழ்ச்சிகளிலே ஒன்று.

காலை நிகழ்ச்சி இது. மாலை நிகழ்ச்சி ஒன்றைப் பார்க்கலாம்.