பக்கம்:சிந்தனையாளன் மாக்கியவெல்லி.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

என் குறிப்புகளைப் படிப்பவர்கள், வரலாறு படித்ததன் பயனை அடையலாம்.

நகரங்கள் ஏற்பட்ட கதை :

ரோமாபுரியின் ஆரம்பத்தைப் பற்றியும், அதன் நீதிமான்களைப் பற்றியும் நிர்வாகத்தைப் பற்றியும் படித்தவர்கள் இத்தனை நூற்றாண்டுகளாக அங்கு நிலைத்து நின்று வரும் நீதி நெறியைக் கண்டு வியப்படையமாட்டார்கள்.

எல்லா நகரங்களுமே அந்தந்த நாட்டு மக்களாலோ அல்லது அன்னியர்களாலோ உண்டாக்கப்பட்டவையாகவே இருக்கும். தனித்தனிக் கூட்டங்களாகப் பிரிந்து வாழ்ந்த நாட்டு மக்கள், வெளிப் பகைவர்களின் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும்போது எதிர்த்து நிற்க மாட்டாமையாலும், தேவைப்பட்ட நேரத்தில் ஒன்று சேர முடியாமையை எண்ணியும், இப்படிப்பட்ட ஆபத்துக்களைத் தவிர்ப்பதற்காக நகரங்களை நிர்மாணித்தார்கள். ஏதன்ஸ் மாநகரும் வேனிஸ் மாநகரும் இவ்வாறு ஏற்பட்டவையே. தனித்தனியே பிரிந்து வாழ்ந்த நாட்டு மக்களை ஒன்று திரட்டித் தீசியஸ் என்பவன் கட்டிய நகரம் ஏதன்ஸ், ரோமானிய சாம்ராஜ்யம் வீழ்ச்சியடைந்தபின் இத்தாலியை நாசப்படுத்திய துஷ்டர்களிடமிருந்தும், போரிலிருந்தும் தப்பிப்பதற்காக அட்ரியாட்டிக் கடலின் முன் பகுதியில் இருந்த சிறு தீவுகளில் குடியேறி வாழ்ந்த அகதிகளால் நிர்மாணிக்கப்பட்டது வேனிஸ் நகரம். இந்த அகதிகளை எந்த அரசனும் ஆளவில்லை. தங்களுக்குச் சிறந்ததென்று தோன்றிய சட்டங்களை ஏற்படுத்திக் கொண்டு தங்கள் புதிய ராஜ்யத்தில் அவர்கள் வாழ்ந்து வந்தார்கள். இத்தாலியைச் சூறையிட்டவர்களிடமிருந்து தப்பி இவர்கள் நெடுங்காலம் அமைதியாக வாழ்ந்தார்கள்.

ஒரு ராஜ்யத்தில் மக்கள் தொகை அதிகமாகி விட்டால், அந்த ராஜ்யத்தின் அரசனோ குடிமக்களோ வேறு ஒரு நகரத்தை உண்டாக்குவதுமுண்டு. அன்னியர்களால் இப்படித்தான் நகரங்கள் உண்டாக்கப்படுகின்றன. ரோமானியர்கள் இப்படிப் பல நகரங்களைத் தங்கள் சாம்ராஜ்யத்தில் ஏற்படுத்தியிருக்கிறார்கள். மன்னர்கள் தாம் வாழுவதற்காக என்றும். தங்கள் கீர்த்தியின் சின்னங்களாகவும் பல நகரங்களை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.