பக்கம்:சிலம்புநெறி.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சிலம்பு நெறி ☐ 35

மனத்துய்மை பெறுதலுக்குரிய சிறந்த வாயில் மற்றவர்களிடத்தில் அன்பு காட்டுதல்; அவர்கள் வாழ்வதற்குரியன செய்தல்; அவர்கள் மகிழ்தலுக்குரியன செய்தல். அவற்றையும் நன்றி, பாராட்டு, புகழ் முதலியன பெறும் வேட்கையின்றிச் செய்தல்; பயன் பெறுவார் இகழ்ந்து வெறுத்தாலும் பொறுத்துக் கொண்டு செய்தல் அறம்.

புகழை விரும்பிச் செய்யும் செயல்கள் மனத்துாய்மையைத் தரா. ஏன்? புகழ் விருப்பம் போதையை விடக் கொடியது. மேலும் மேலும் பெற விரும்பும்படி காமுறுத்துவது புகழ்.

அதனால் காலப் போக்கில் அறத்தின் நோக்கம் மாறி, செய்வன அறமாக இல்லாமல் போகும். செய்யப்படுவோர் பயன்படுதலுக்குரியர் என்று, புகழ்வோருக்கு வரையறையின்றிச் செய்யும் மனப்பாங்கே தோன்றும். அப்போது புகழ்வோரே பயன்பெறுவர், வறியோர்-உரியோர் பயன் பெற மாட்டார்கள்.

தூய்மை, துறவு, தொண்டு இவைதாம் உலகத்தில் அழுக்காற்றின் வழியில் சிக்கிப்போட்டிகளுக்கு ஆளாகாதவை. மற்ற உலகியல் பேறுகள் அனைத்தும் மற்றவர் களிடத்தில் அழுக்காற்றைத் தோற்றுவிப்ப்ன; போட்டி உணர்வைத் தருவன. அதனால், புகழ்பெறுதலும் பாதுகாத்தலும் அரிது. அதுமட்டுமன்று. ஒருவர் புகழ், மற்றவர்களிடத்தில் அழுக்காற்றை உண்டாக்கும்.

அழுக்காறுடையவர்கள், புகழுடையோரை இகழ்வர், இகழ்ச்சியைத் தாங்க முடியாமல் பொறுமையிழந்து பொருத வேண்டிவரும். அவ்வழி பகையும் போரும் மூளும்.

புகழ் கருதிச் செய்யும் எவையும் அறமாகா. வணிக நோக்கோடு செய்யப்பெறும் எச் செயலும் அறமாகாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்புநெறி.pdf/37&oldid=1384644" இலிருந்து மீள்விக்கப்பட்டது