பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

121


 என்பது கனா நூல் பாடல். கடையாமமாகிய நான்காம் யாமம் என்பது வைகறை மூன்று மணியிலிருந்து ஆறு மணி வரையிலுமாம். கடிது உறும் என்று இருப்பதைக் கொண்டு, அது கடையாமமாயிருக்கலாம் என்று எண்ணி நள்ளிருள் யாமம் என்பதற்குக் கடையாமம் எனப் பொருள் வரைந்து உள்ளனர் என்று தோன்றுகிறது.

மகிழ்ச்சியான சூழ்நிலையில் மன்னர்கள் சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்வதும் வரி நீக்கம் செய்வதும் உண்டு. வெற்றி வாகை சூடிய செங்குட்டுவன் இவ்வாறு செய்தானாம்.

"சிறையோர் கோட்டம் சீமின் யாங்கணும்
கறைகெழு கல்லூர்க் கறைவீடு செய்ம்மென
அழும்பில் வேளோடு ஆயக் கணக்கரை
முழங்கு நீர்வேலி மூதூர் ஏவி"
(28:203.206)

அழும்பில் வேளையும் ஆயக்கணக்கரையும் ஏவி இவ் வாறு செய்வித்தானாம். இது நடுகல் காதையில் அறிவிக்கப் பட்டுள்ளது. பாண்டியனும் இவ்வாறு செய்ததாகக் கட்டுரை காதையில் சொல்லப்பட்டுள்ளது.

"சிறைப்படு கோட்டம் சீமின் யாவதும்
கறைப்படு மாக்கள் கறைவீடு செய்ம்மின்"
(23:126,127)

மற்றும் ஒருவகை மரபு :- கணவர்க்கு உணவு இடும் போது அவன் கால்களைத் தூய்மை செய்தலும், இலை போடுமுன் தரையில் தண்ணிர் தெளித்தலும் உண்டு. கோவலனுக்கு உணவு இடும் போது கண்ணகி இவ்வாறு செய்தாளாம். வணிக மரபினர் உண்ணுமுன் சில சடங்குகள் செய்வராம்.

"கடிமலர் அங்கையின் காதலன் அடிநீர்

சுடுமண் மண்டையின் தொழுதனள் மாற்றி"
(16:38, 39)