பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

201


“தளர்ந்த நடையில் தண்டுகால் ஊன்றி

வளைந்த யாக்கைஓர் மறையோன்” (14-30,31)

என அமைந்துள்ளது வியக்கத்தக்கது. சிலம்பில், கோவலனிடம் பரிசு பெற வந்த அந்தணன் அவ்வாறு கூறப்பட்டுள்ளான். மணிமேகலையில், இந்திரன் ஆபுத்திரனிடம் தள்ளாத கிழ அந்தணனாக வந்தமை அவ்வாறு கூறப்பட்டுள்ளது. இளங்கோவும் சாத்தனாரும் ஒருவரைப் பார்த்து ஒருவர் எழுதியிருக்கக் கூடுமா? அல்லது, இயற்கையாக எழுதியிருக்கக் கூடுமா? என்பது எண்ணத்தக்கது.

செல்லாச் செல்வன்

தன் குழந்தையை அறியாது கொன்ற கீரிப்பிள்ளையைக் கொன்றுவிட்ட பார்ப்பணியின் கணவன், அவளது கொலைச் செயலைப் பொறுக்க முடியாதவனாய், அவள் கையால் உணவு பெற்று உண்ணவும் உடன்படாதவாைய், வடமொழி வாசகம் ஒன்று எழுதி அவள் கையில் தந்து இதை யாரிடமாவது காட்டுக என்று கூறி அவளைப் பிரிந்து வடநாடு சென்றுவிட்டான். அவள் பல தெருக்களிலும் சுற்றி அலைந்து - பல வீடுகட்கும் சென்று, தன் பழியைத் தீர்க்கும் வழி செய்து தன்னைக் காத்துக் கணவனோடு சேர்த்து வைக்க வேண்டும் எனக் கெஞ்சிக் குறையிரந்து கொண்டிருந்தாள். தெருவில் அவளைக் கண்ட கோவலன், அருகே வரச் செய்து அவளது குறையைக் கேட்டு, அவளது பழி தீர ஏராளமான அறங்கள் புரிந்து, அவளுக்குத் தூய்மை உண்டாகச் செய்து நிறைந்த பொருள் கொடுத்து அவளைக் கணவனோடு சேர்த்து வைத்தான்.

“தீத்திறம் புரிந்தோள் செய்துயர் நீங்கத்
தானஞ் செய்து அவள்தன் துயர் நீக்கிக்
கானம் போன கணவனைக் கூட்டி
ஒல்காச் செல்வத்து உறுபொருள் கொடுத்து

கல்வழிப் படுத்த செல்லாச் செல்வ” (15,71-75)