பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

27. மதுரை - பாண்டியன் சிறப்புகள்

"பாடல் சால் சிறப்பின் பாண்டியன் பெருஞ்சீர்
மாட மதுரை"
(பதிகம் - 19, 20)

என மதுரையும் பாண்டியனும் சிறப்பிக்கப் பெற்றிருப்பதைச் சிலம்பின் பாயிரப் பகுதியில் காணலாம். மதுரையின் சிறப்புகள் பாண்டியனுக்கும் உரியன - பாண்டியன் சிறப்புகள் மதுரைக்கும் உரியன - இரண்டையும் ஒரு சிறிது காணலாம்:

புறஞ்சேரி யிறுத்த காதையில் கோவலன் கவுந்தியிடம் கூறுகிறான்: பகலில் கொடிய வெயிலில் கொதிக்கும் பரல்கல் நிறைந்த பாதையில் கண்ணகியின் கால்கள் நடக்க மாட்டா. ஆதலின், இனி நாம் இரவில் பயணம் செய்யலாம். பாண்டியனது ஆட்சியிலே இரவில் பயணம் செய்ய எந்த விதமான அச்சத்திற்கும் இடமில்லை. கண்டாரைக் கொல்லும் கரடியும் எந்தப் புற்றையும் அகழாது. வரிப் புலியும் மான் கூட்டத்தைக் கொல்ல நினையாது. முதலையும் பாம்பும் பேயும் இடியும் எவ்வுயிர்க்கும் இன்னல் விளைக்கமாட்டா. செங்கோலனாம் பாண்டியன் காக்கும் நாடு இத்தகையது என்ற பெரும் புகழ் எங்கும் பரவியுள்ளது; ஆதலின் நாம் இரா வழி நடிக்கலாம் என்று கோவலன் கூறினான்.

"கோள்வல் உளியமும் கொடும்புற்று அகழா
வாள்வரி வேங்கையும் மான்கணம் மறலா
அரவும் சூரும் இரைதேர் முதலையும்
உருமும் சார்ந்தவர்க்கு உறுகண் செய்யா
செங்கோல் தென்னவன் காக்கும் நாடென
எங்கணும் போக்கிய இசையோ பெரிதே"
(13.5 - 10)