பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

348

சுந்தர சண்முகனார்



"மண்ணகம் கொண்டு செங்கோல் ஓச்சிக்
கொடுந்தொழில் கடிந்து கொற்றம் கொண்டு
நடும்புகழ் வளர்த்து நானிலம் புரக்கும்
உரைசால் சிறப்பின் நெடியோன்" (22:57.60)

என்பது பாடல் பகுதி. நெடியோன் என்பது பாண்டியனைக் குறிக்கும். வடிம்பலம்ப நின்ற பாண்டியனுக்கு இது சிறப்பாக உரியது. புறநானூற்றில், 'முந் நீர் விழவின் நெடியோன்' (9:10) எனப்பட்டுள்ளான். மதுரைக் காஞ்சியில்

"நிலம்தந்த பேருதவிப்
பொலந்தார் மார்பின் நெடியோன்" (60, 61)

"புணர்கூட் டுண்ட புகழ்சால் சிறப்பின்
நிலந்தரு திருவின் நெடியோன் போல" (62, 63)

என நெடியோன் என்னும் ஆட்சி உள்ளது. நெடுஞ்செழியன் என்னும் பெயரிலுள்ள நெடுமை என்னும் பண்பு, நெடியோன் என்னும் பெயரிலிருந்து பெறப் பட்டதாயிருக்கலாம். மேலே எடுத்துக் காட்டியுள்ள சிலம்புப் பகுதியின் நான்கு அடிகளில், திரும்பத் திரும்பப் பல கோணங்களில் பாண்டியனைப் படம்பிடித்துக் காட்டியுள்ளார் இளங்கோ.

மதுராபதி புகழ்ந்தமை

மதுரை நகர்த் தெய்வமாகிய மதுராபதி என்பவள், நகரை எரித்த கண்ணகியிடம் பாண்டியனது புகழைக் கூறுகிறாள்: பாண்டியனது ஆட்சியிலே மறை ஒசையல்லது ஆராய்ச்சி மணியின் ஒசை இதுவரை கேட்டதில்லை. பாண்டியனின் அடிகளைத் தொழாத பகைவரைத் தவிர, குடிகள் பழிக்கும் கொடுங்கோலன் பாண்டியன் என்ற இகழை அவன் எய்திய தில்லை - என்பது மதுராபதியின் கூற்று: