பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

356

சுந்தர சண்முகனார்


கொடுங்கோலன் என்னும் பெயர் எடுத்தவனாகவும் ஆவேனாக என்று கடுமையான சூள் உரைத்தான்:

"வடதிசை மருங்கின் மன்னர் முடித்தலைக்
கடவுள் எழுதஓர் கற்கொண் டல்லது
வறிது மீளும் என் வாய்வா ளாகில்
செறிகழல் புனைந்த செருவெங் கோலத்துப்
பகையரசு நடுக்காது பயங்கெழு வைப்பின்
குடிநடுக் குறுாஉம் கோலேன் ஆக" (26. 13-18)

வடபுல மன்னரின் முடிமேலே கல்லை ஏற்றி வருவேன் எனக் கடுமையாகச் சூள் உரைத்தான். கடவுள் சிலையைச் செய்தலைக் 'கடவுள் எழுத' என்னும் தொடரால் குறிப்பிட்டிருப்பது சுவையாயுள்ளது. நான் வறிதே மீளுவே னாகில் என்பதற்குப் பதிலாக, என் வாள் மீளுமாகில் என்று கூறியிருப்பது முன்னதினும் மிக்க சுவை பயக்கிறது.

நீர்ப்படைக் காதையில் மாடலன் பின்வருமாறு செங்குட்டுவன் புகழை எடுத்தியம்பினான்: நின் மைத்துனச் சோழனாகிய கிள்ளியோடு போர் புரிய வந்த பங்காளிச் சோழர்கள் ஒன்பதின்மரையும் நேரி வாயிலில் ஒரே பகலில் ஒழித்து வென்றவன் நீ - என்பது புகழுரை. சோழன் மணக்கிள்ளியின் மகள் நற்சோணை என்பவள் செங்குட்டுவன் தாய். எனவே, மணக்கிள்ளியின் மகனாகிய கிள்ளி செங்குட்டுவனுக்கு மைத்துனன் (அம்மான் மகன்) ஆகிறான். இந்த வென்றி சிலம்பில் வேறு இடத்திலும் குறிப்பிடப்பட் டுள்ளது:

"ஆர்புனை தெரியல் ஒன்பது மன்னரை
நேரி வாயில் நிலைச்செரு வென்று" (28:16-17)

என்பது பாடல் பகுதி. மற்றும் பதிற்றுப்பத்துப் பதிகத்திலும் இது குறிப்பிடப்பட் டுள்ளது.