பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/380

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

376

சுந்தர சண்முகனார்


நின்று திருமாலின் திருப்பெயர்களைச் சொல்லிக் கொண்டு திருமாலின் அடியவர்போல் நடித்தனராம்.

தம் மனைவியரும் உறவினரும் வந்து தம்மைக் கட்டிக் கொண்டு அழுதபோது, ஐயையோ - யாங்கள் உம் உறவினர்கள் அல்லர் - போர் காண வந்த தேவர்கள் என்று சொல்லி அவர்களை உதறித் தள்ளி அப்பால் சென்றனராம் சிலர். நாங்கள் அரக்கர் அல்லர் - மனிதர்கள் என்றனராம் சிலர். வண்டு வடிவம் எடுத்துப் பொழில்களில் தங்கினராம் சிலர். மயக்கம் கொண்டவர்போல் படுத்துக் கொண்டனராம் சிலர். தம் அரக்கக் கோரப் பற்களை ஒடித்து மக்கள் பற்கள்போல் ஆக்கிக் கொண்டனராம் சிலர். அரக்கராகிய தம் செம்பட்டை மயிரைக் கருமையாக்கிக் கொண்டு மக்கள் போல் நடித்தனராம் சிலர். பாடல்கள்:

"மீனாய் வேலையை உற்றார்சிலர், சிலர்
பகவாய் வழிதொறும் மேய்வுற்றார்
ஊனார் பறவையின் வடிவானார் சிலர்
சிலர் நான்மறையவர் உருவானார்
மானார் கண்ணிள மடவார் ஆயினர்
முன்னே தம்குழல் வகிர்வுற்றார்
ஆனார்சிலர், சிலர் ஐயா நின்சரண்
என்றார், கின்றவர் அரி என்றார்" (40)

"தம்தாரமும் உறுகிளையும் தமை யெதிர்
தழுவுந்தொறும் நுமதம ரல்லேம்
வந்தேம் வானவர் என்றேகினர் சிலர்
சிலர் மானுடர்என வாய்விட்டார்
மந்தாரம் கிளர் பொழில்வாய் வண்டுகள்
ஆனார்சிலர், சிலர் மருள்கொண்டார்
இந்தார் எயிறுகள் இறுவித்தார் சிலர்
எரிபோல் குஞ்சியை இருள்வித்தார்" (41)