17
“கொடுக்கிலாதானைப் பாரியே யென்று கூறினுங் கொடுப்பாரிலை” என்று நம் சுந்தரமூர்த்திசுவாமிகள் அவ்வள்ளலின் கொடைத்திறத்தைப் பாராட்டி யருளினார்கள். நம் மக்களொவ்வொருவரும் தந்தேயம், மொழி, சமய முதலியவற்றை யியன்றவரை பேண முற்படலும் தத்தங் கடமையாகும். இக்கடமை யுலகியற் கடமை சமயக் கடமையென இருவகைப்படும். அவற்றுளீண்டுக் கூறப்பட்டன சில வுலகியற் கடமைகளாம். இன்னும் இது சம்பந்தமாகக் கூறப்புகின் மிகவிரியுமாதலின், எடுத்துக்கொண்ட விடயத்திற்கியையுமாறு நம் சமயக் கடவுளராகிய சிவபிரான்மாட்டு நாம் செய்யவேண்டியவைகளை யீங்குக் கூறுவேன்.
(௮) சிவபிரானிடத்துச் செய்யவேண்டிய கடமைகள்.
சைவர்களாகிய நாமெல்லாம் நம்சமயக் கடவுளாகிய சிவபிரானை யுண்மை யன்போடு வழிபடுதல் வேண்டும். அங்ஙனம் வழிபடுங்கா லிதர தெய்வங்களைப் பழித்தல் கூடாது. நந்தெய்வத்தையே போற்றுவோமாக. ஆயின், ஒருசாரார், எல்லாத் தெய்வங்களும் ஒன்றேயாதலின், அத்தெய்வங்க ளெல்லாவற்றையும் சமமாகக் கருதியன்பு செய்தல் வேண்டுமென்பார். அன்னார் கூற்று மரபு பிழைபட்டதொன்றாதலின், பொருந்தாமை காட்டுதும். ஒவ்வொரு சமயத்தாருந் தத்தஞ் சமயக்கடவுளைச் சிறப்பு வகையானும் பிற சமயக்கடவுளைப் பொதுவகையானும் அன்புசெய்யலாமன்றிச் சமநிலையாக் கோடல் பக்தியின் இலக்கணமன்றாம். தெய்வங்களெல்லாம் உண்மைநிலையில் முடிவில் ஒன்றேயெனினும் அவ்வுண்மை தத்துவஞானிகளுக்கன்றி மற்றையோர்க்குணர்வரிதாம். சாமாநியர்கள் அந்நிலையைப் பற்றிப் பேசல் பேச்சளவேயன்றி யநுபவவளவிற் கோடலரிது. எவ்விஷயமும் அநுபவத்தினன்றிப் பேச்சளவினொழிதல் பயனின்றாம். இன்ன இன்ன வொழுக்கங்கள் உத்தமமென்று பேசிவிட்டு அவற்றைக் கடைப்பிடிக்காவிடின், அப்பேச்சாற் பயனென்னை? “சொல்லுதல் யார்க்கு மெளிய வரியவாம், சொல்லிய வண்ணம் செயல்” என்பதும் ஈண்டுக் கருதற்பாலது. சிறப்பென்பது ஓரிடத்தன்றிப் பலவிடத்துஞ் சேறலாகாது. பல்லிடத்துஞ் சேறல் சாமாநிய பக்தியேயாகும். ஒரு பெண்மகள் தன்னைப் பிடித்த காதலனிடத்துச் செய்யும் அன்புக்கும்