21
புலாலுண்ணன் முதலிய வற்றிற்கு முதிர்ந்த அன்புடைச் சிலர் செயலாளராகிய அடியார்களை யுதாரணங்காட்டிப் புரைபடாதீர்கள்; சமயாசாரமாகிய நித்திய கன்மங்களை விடாதுசெய்ய முந்துமின்கள்; ஒவ்வோரொழுக்கங்களையுஞ் சொல்லளவிற் சுருக்கியுஞ் செயலளவிற் பெருக்கியுங் காட்டுங்கள்; நம் சமயக்கடவுளைச் சிவலிங்காதி திருமேனிகளிடத்தும், சிவனடியாரிடத்து மிருப்பதாகக் கண்டு விசேட அன்பைச் செய்மின்கள்; பிற சமயங்களும் இறைவனருளிருந்தவாறு ஆன்ம பக்குவ நோக்கி வெளிப்பட்டன வென்னு முண்மையுணர்ந்து அவற்றை யிகழன்மின்கள்; இளமைப் பருவம் காமாதிகளை யநுபவித்தற்கென்றே கருதிக் கழிக்காது நம் பெருமானை வழிபட்டுய்தற்கு மிகவேற்ற தொரு பருவ மென்றெண்ணுமின்கள்; ஆலய வழிபாட்டையும் விக்கிரகாராதனத்தையும் இயன்றவரை யிடைவிடாது செய்ய விரும்புமின்கள்; உரிய கருவிநூல்களையும், அவற்றின் பயனாகச் சமய நூல்களையும் நடுநிலையுடன் ஆராய்மின்கள்; தாங்கொண்டதே பொருளெனக் கடைப்பிடியாது தம்மினுந் தாழ்ந்தார் வாயுண்மை வருமாயின் அதனை மகிழ்ந்தேற்றுக் கொண்மின்கள்; நூல்களிற் கண்டவற்றை யொழுக்கத்திற் காட்டற் கன்றிக் கலாம் விளைத்தற்குபயோகமென் றெண்ணாதீர்கள்; நம் சமயத்தையும், பாஷையையும் பிறசமயத்தார்க்கும் பிறபாஷையார்க்கும் வருத்தமுண்டாமாறின்றிப் பேண முற்படுமின்கள்; பிறர் நம்சமயம் பாஷைகளை யறியாமையான் இகழின் அவர்மனம் வருந்தாது விஷயங்களுக்கு மாத்திரந் தக்கவாறு மறுமொழிதந்து அவரைத் திருத்துமின்கள்; பின்னுந் திருந்தாராயின் அவரறியாமைக் கிரங்கி யஃதொழிய நங்கடவுளை வேண்டுமின்கள்; சிவபிரான், விரும்பிக் கருணைபாலித்தற்குரியதாக ஜீவதயையென்னுந் திவ்யாமிர்தத்தை முதலில் நும் நெஞ்சக் களத்திற் கொண்மின்கள்; நண்பர்களே! இவையெல்லாம் சீவர்களாகிய நங்கடமைகளேயாம். இத்துணைக் கடமைகளுள் மிக முக்கியமான கடமையொன்று சிவபிரானை நோக்கச் சீவர்களுக்குண்டு. அதனையும் ஈண்டுக்கூறுவேன்.
(௯) ஓரின்றியமையாக் கடமை.
அஃதாவது, இறைவனை நோக்க ஆன்மா ஒருவித சுதந்தரமுமின்றிப் பரதந்திரனாதலின், ஆணவமலத்தாற் பிணிப்புண்டு கிடக்கும் பெத்தகாலத்தும், தநுகரணங்களைப் பெற்றுச் சிறிது அறிவு விளக்கமுற்று உபாசனாதிகளைச் செய்யு மத்தியகாலத்தும், மலசக்தியறவே யொழியப் பெற்றுச் சிவத்துவமெய்திப் பேரின்பநுகரும் முத்திகாலத்தும் தன்பாலிடைவிடாதமைந்து கிடக்கும் அடிமைத் தன்மையேயாம். அடிமையாவது “கண்ட விவையல்லேனா னென்”