2
பெரியோர்களே!
மறையாகமங்களாலும், அவற்றின் முடிவு நூல்களானும் பொதுவாகவுஞ் சிறப்பாகவும் விளக்கப்பட்ட பதிப்பொருள் சிவபிரானேயென்பது அந்நூல்களைச் செவ்விதினாராயு நுண்ணறிஞர்க்கெல்லாம் ஒத்ததொன்றாம். இப்பதிப்பொருளைக் கடவுண் முதலிய பொதுப்பெயர்களான் வேதநெறியொழுகும் எல்லாச் சமயத்தார்களும், சிவன் முதலிய சிறப்புப்பெயர்களாற் சமயாதீதமாகிய சைவநெறிநிற்போருங் கூறுப. கடவுள் என்னும் சொற்குப் பொருள் கடந்தவரென்பதாம். எவற்றைக் கடந்தவரெனின், சுட்டியறியப்படுங் காரிய ரூபப் பிரபஞ்சத்தையும், அதனாற் றத்துவ தாத்துவிகங்களையுங் கடந்தவரென்க. இப்பொருள் ஏனைய தேவர்களுக்கு உண்மையிற் பொருந்தாதென்பது, அன்னார் சிவாகமங்களுட் கூறப்படு முப்பத்தாறு தத்துவங்களுக் குட்பட்டவர்களாதலானும், பேராற்றலுடைய சிவபிரானியக்கத்தான் ஒவ்வோரதிகாரங்களைப் பற்றி நிற்பவராகலானுமாம். மற்றைச்சமய நூல்கள் போலாது சைவ சமயத்திற்குறைவின்றிக் கூறப்படுந் தத்துவங்கள் முப்பத்தாறாம். அவற்றைக் கடந்து நிற்பவர் பரம்பொருளாகிய சிவபிரான் ஒருவரேயாவர். இம்முப்பத்தாறு தத்துவங்களு முப்பகுதியினவாம். அவற்றுள், தொடக்கப்பகுதியாகிய ஆன்மதத்துவ விரியுள் ஒவ்வொன்றே ஏனைய சமயக்கடவுளர்களின் நிலயமாகும். ஆதலிற் கடவுண் முதலிய சொற்களும் உண்மையிற் சிவபிரானையும் உபசாரத்தான் மற்றைத் தேவர்களையுங் கூறுவனவாம். இங்ஙனமே வடமொழிக்கட் கூறப்படும் பிரமசப்த முதலியவை உண்மையிற் சிவபிரானையும் உபசாரத்தாற் பிறதேவர்களையும் குறிப்பிடும் பொருளுடைய வென்பது, சுவேதா சுவதரம், கேநம் முதலிய உபநிடதங்களானும், அவற்றை விரித்து விளக்கிய வாயுசங்கிதை முதலிய புராணங்களானும் நன்குணரலாம். இன்னும் இவ்விஷயமாக வேதாகமாந்தங்களை நிலைண்டுணர்ந்த நீலகண்டவாசிரியர், அரதத்தாசாரியர், அப்பயதீக்ஷிதர் முதலிய சைவப்பெரியார்கள் சிறிதும் ஐயமின்றி ஆராய்ந்துரைத்தருளிய அரிய வடநூல்களானுந் தெளியலாம். பிரபஞ்ச நிகழ்ச்சியினிமித்தம் ஒவ்வொரு தேவர்களையும் அதிட்டித்து நின்று சிவபிரான் ஒருவரே சிருட்டியாதி யருட்டொ