8
சீதா கல்யாணம்
'கல்வியில் பெரியவன் கம்பன்', 'கவிச் சக்கரவர்த்தி கம்பன் என்றெல்லாம் நமது முன்னோர்கள் அவனைப் போற்றி உரைத்திருக்கிறார்கள். ஆனாலும், கம்பன் யார் என்று நாமெல்லோரும் தெரிந்து கொண்டோமா என்றால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். காரணம், சாதி மத பேதங்களால் பிளவுண்டு கிடக்கும் தமிழர்களிடையே அவன் பிறந்து விட்டான். அவனுடைய கவியை மட்டும் படித்துப் படித்துச் சுவைக்கிறவர்கள், அவன் ஓர் உலக மகாகவி, சாதி சமயம் முதலிய வேறுபாடுகளுக்கு எல்லாம் அப்பாற்பட்டவன், ஒரு பெரிய மேதாவி, ஏதோ தமிழர் பெற்ற அதிருஷ்டம்தான் அவன் தமிழனாய்ப் பிறந்தான், தமிழிலே இக்கவிதைக் களஞ்சியத்தை எழுதி உதவினான் என்று கண்டு கொள்ளலாம். பூர்வீக கிரேக்கருக்கு ஹோமர் எப்படியோ, ரோமருக்கு வர்ஜில் எப்படியோ, இத்தாலியருக்கு தாந்தே எப்படியோ, வடமொழியாளருக்கு வால்மீகி எப்படியோ,அப்படியே தமிழருக்கும் தமிழுக்கும் கம்பன் பெருமை கொடுக்கிறான்.
கம்பனது சரித்திரம் ஒன்றும் திட்டமாக நமக்குக் கிடைக்கவில்லை. அவன் திருவழுந்துரில் இன்றைக்கு சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்தவன் என்றும், வெண்ணெய் நல்லூர் சடையப்ப வள்ளலாரது ஆதரவில் வளர்ந்து, அவர் விரும்பியபடியே இந்த ராமாயணத்தைப் பாடி முடித்தான் என்றும் தெரிகிறது. இத்தகைய ஒரு பெரிய காவியம் எழுது வதற்கு அவனுக்குக் கலைமகளது பரிபூரணமான அருளும், சடையப்பரது கருணையால் கிடைத்த